உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் தயவு தேவையில்லையா? திமுகவை மிரட்டும் அரசு ஊழியர்கள்..!

By Selva KathirFirst Published Aug 30, 2021, 11:24 AM IST
Highlights

கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கையில் எடுத்தார் ஜெயலலிதா. தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். 

அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழக்கம் போல் உண்மைகளை போட்டு உடைத்து வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் திமுக அரசுக்கு எதிராக கொதியாய் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கையில் எடுத்தார் ஜெயலலிதா. தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். அப்போது முதல் அரசு ஊழியர்கள் என்றாலே அதிமுகவிற்கு வேப்பங்காயாக கசக்க ஆரம்பித்தது. ஆனால் திமுகவோ இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

கடந்த முறை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது, அவர்களுக்கான ஓய்வூதியம் என்ன, அவர்கள் பெறும் சலுகைகளை பட்டியலிட்டு ஆடியோவே வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பகைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திவிட்டதாக அப்போது அரசு ஊழியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கின.

அத்தோடு அதிமுக அரசுக்கு எதிராக குறிப்பிட்ட இடைவெளியில் அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டங்களை பின்னால் இருந்து திமுக இயக்கியும், ஆதரித்தும் வந்தது. அத்தோடு அவர்களின் மிக முக்கிய கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதே போல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி உயர்வும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஆளுநர் உரையிலும் சரி, பட்ஜெட்டிலும் சரி இது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போதைக்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதே போல் அகவிலைப்படியை உயர்த்தவும் தமிழக அரசிடம் நிதி இல்லை என்றும் இது அரசு ஊழியர்களுக்கே நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.

அத்தோடு வழக்கம் போல் அரசு ஊழியர்களுக்கே தமிழக அரசின் பெரும்பான்மை வருமானம் செலவழிக்கப்படுவதாக அதிமுக கூறிய அதே பல்லவியை பிடிஆரும் பாடிவிட்டார். இதனால் தான் திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிந்துவிட்டது இனி எங்கள் தயவு தேவையில்லை என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறதா? உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாட்டார்களா? அங்கு பூத்தில் நாங்கள் தானே பணியில் இருக்கப்போகிறோம், அப்போது தெரியும் நாங்கள் யார் என்று என சங்க நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர்.

click me!