பாஜகவின் இந்த நிலைமைக்கு பட்னாவிஸ்தான் காரணம்: கொளுத்திப்போட்ட சிவசேனா .....

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 11:59 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் பாஜக நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி ஆட்சியை நழுவ விட்டதற்கு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற கூடுதல் அவசரம், சிறுபிள்ளைத்தனமான பேச்சுதான் காரணம் என்று சிவசேனா காட்டமாகத் தெரிவித்துள்ளது.
 

சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவின் தலையங்கத்தில் பட்னாவிஸ் குறித்தும், மத்திய அரசில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து எம்.பி. சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்ததில் முக்கியத்துவம் என்னவென்றால், மத்தியில் அதிகார சக்தியாக விளங்கும் மோடி, அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டுத்தான் ஆட்சிக்கு உத்தவ் தாக்கரே வந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்யும். தேவேந்திர பட்னாவிஸுடன், அஜித் பவார் சேர்ந்து பதவி ஏற்றவுடன் ஏராளமானோர் சரத் பவார் நடத்தும் நாடகம் என்றெல்லாம் சிலர் பேசினார்கள். 

அவர்கள் பேசியது எனக்குச் சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது.ஏனென்றால், மகா விகாஸ் அகாதி கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கக் காரணமாக இருந்தவரே சரத் பவார்தான்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, தேவேந்திர பட்னாவிஸ் சிறுபிள்ளைத்தனமாகப் பேசினார். மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இருக்காது. சரத் பவாரின் சகாப்தம் முடியப்போகிறது, பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் அகாதி கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கும் என்றெல்லாம் பேசினார்.


ஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ்தான் இருக்கிறார்.
நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்ற பட்னாவிஸின் பேச்சு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவசரம்தான் பாஜகவை ஆட்சி அமைத்த 80 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் மூழ்கடித்துவிட்டது. 

மாநிலத்தில் பாஜகவின் இந்த நிலைக்கு பட்னாவிஸ்தான் காரணம்.தேவேந்திர பட்னாவிஸின் அதீத நம்பிக்கை, டெல்லியில் உள்ள முக்கிய, மூத்த தலைவர்களின் நட்புதான் அவரை அழித்துவிட்டது. மகாராஷ்டிராவில் 80 மணிநேரம் இருந்த பட்னாவிஸ், அஜித் பவார் தலைமையியான பாஜக ஆட்சிக்கு வில்லனாக ஆளுநர் அலுவலகம்தான் இருந்துள்ளது.


ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஒருமுறை என்னிடம் கூறுகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு புறம்பாக நடக்கமாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸுக்கும், அஜித் பவாருக்கும் ஏன் அவசரப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருவேளை மத்தியில் ஆளும் உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு இதில் இருக்கிறதா?

அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிகழ்வுதான் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சியை நெருக்கமாக வரவழைத்து, கூட்டணியை இன்னும் வலிமைப்படுத்தின.


என்சிபி எம்எல்ஏக்கள் அனைவரும் சரத் பவார் பக்கம் நின்றபோது, அஜித் பவார் பக்கம் இருந்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டு மீண்டும் சரத் பவார் பக்கமே திரும்பினர். அஜித் பவாரும் சரத் பவாருடன் இணைந்துவிட்டார்.


சரத் பவார் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்தக் கூட்டணி உருவாகி இருந்திருக்காது. 

சிவசேனாவுடன் கை கோக்க காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் பின்வாங்கினார்கள். ஆனால், சோனியா காந்தியிடம் சென்ற சரத் பவார், எங்கள் தலைவர் பால் தாக்கரேவுக்கும், இந்திரா காந்திக்கும் இருந்த நட்புறவு குறித்து எடுத்துக் கூறினார்.


எமர்ஜென்சிக்குப் பின், இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் வேட்பாளர்களை நிறுத்தியபோது சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதையும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜியையும் சிவசேனா ஆதரித்ததையும் சரத் பவார் விளக்கினார்’’.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!