வீடு புகுந்து தாக்கியதில் விவசாயி பலி! 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யுங்க! வேல்முருகன்

By vinoth kumarFirst Published Dec 9, 2022, 7:18 AM IST
Highlights

பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

அரியலூர் விவசாயி மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம். இவரது மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல்  தலைமையில் 8 காவலர்கள் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி செம்புலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் அருண்குமார் இல்லை.

இதையும் படிங்க;- மோடி அரசின் கைக்கூலி ஆளுநர் RN.ரவி! கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ?இறங்கி அடிக்கும் வேல்முருகன்

இதன் காரணமாக, ஆத்திரமடைந்த பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் காயமடைந்த மூவரும் அரியலூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வீடு திரும்பினார்கள். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் நேற்று உயிரிழந்து விட்டார். அவரது மரணத்துக்கு காவல்துறையினர் தான் காரணம்  எனக்கூறி, செம்புலிங்கம் குடும்பத்தினர், உறவினர்கள், புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், தன் மீதும், குடும்பத்தினர் மீதும், நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செம்புலிங்கம் தெளிவாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகமும், அதிகார அத்துமீறலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர் காலத்தில் காவல்துறையிடம் இருந்து பொதுமக்களை காக்க முடியும்.

எனவே, செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். செம்புலிங்கம் குடும்பத்தினருக்கு, ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி.. இதை திமுக நிர்வாகிகளே மறுக்க மாட்டார்கள்.. வேல்முருகன் சொன்ன ஷாக் தகவல்..!

click me!