
ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்து விட்டனர். ஆனால் வயது ஆனாலும், படையப்பா போல, அவர்கள் ரஜினி மீது வைத்த பாசம் கொஞ்சம் கூட மாறவே இல்லை.
டீன் ஏஜ் ரசிகர்கள் பெரும்பாலும், விஜய், அஜித் ஆகியோரின் பக்கமே அதிகம் உள்ளனர். குறிப்பாக சொன்னால், அப்பாக்கள் ரஜினி ரசிகர்களாகவும், பிள்ளைகள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களாகவும் இருக்கின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவார், வருவார் என்று காத்திருந்த பலர், இன்னும் ரஜினி ரசிகர்களாகவே தொடர்கின்றனர். ஆனால், அவர்களது இளமை தொடருமா என்ன?
அதனால், நேற்றைய புகைப்பட நிகழ்ச்சியின் பொது, எது நடந்தாலும் கேட்டே தீரவேண்டும் என்று, பல தடைகளையும் மீறி ரஜினியிடம், துணிவாகவே கேட்டு விட்டாராம் ஒரு ரசிகர்.
தலைவா, நீங்கள் அரசியலுக்கு வருவதும், வராததும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதை நாங்கள் வற்புறுத்தவில்லை. ஆனால், வருகிறீர்களா? இல்லையா? என்பதை மட்டும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.
எங்களை போன்ற ரசிகர்கள், எந்த கட்சியில் இருந்தாலும், உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது, போஸ்டர் ஓட்டுவது, கட் அவுட் வைப்பது என்று, நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
அதனால், ரஜினி ரசிகர்கள் என்ற முத்திரை எங்கள் மீது குத்தப்படுவதால், எந்த கட்சியும் எங்களை அங்கீகரித்து, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய பொறுப்புக்கள் எதையும் கொடுப்பதில்லை.
இவ்வளவு நாள், நான் ரஜினி ரசிகர் என்ற முத்திரை இல்லாமல் இருந்திருந்தால், இப்போது மாவட்ட செயலாளர் அளவுக்கு நான் உயர்ந்திருப்பேன்.
இப்போதும் சொல்கிறேன். நீங்கள் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும், நாங்கள் உங்கள் ரசிகராகத்தான் இருப்போம். ஆனாலும், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாராம்.
அதனால், சிறிது நேரம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த ரஜினி, சீக்கிரம் நல்லது நடக்கும் என்று அவர் மனம் ஆறுதல் அடையும் வகையில், ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
எனவே, ரஜினி விரைவில் அரசியல் தொடர்பான தமது முடிவை விரைவில் அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.