தடையை மீறி திமுகவினர் கொண்டாட்டம்... தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் மீது பாய்ந்தது நடவடிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 2:23 PM IST
Highlights

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 146 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 87 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் கூடி வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூட கூடாது என்பதற்காக வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், ஊர்வலங்கள் செல்லவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் தொண்டர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

குறிப்பாக கட்சி அலுவலகங்கள், முக்கிய சாலைகள் என தொண்டர்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தது. முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனிடையே அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முதளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  திமுகவினரின் கொண்டாட்டத்தை தடுக்க தவறியதாக புகார் எழுந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் முரளியை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

click me!