மோடியை ஒருமையில் பேசிய எஸ்றா சற்குணம்.. திமுகவின் அரசியல் புரோக்கருக்கு நாவடக்கம் தேவை என எல்.முருகன் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2020, 10:23 AM IST
Highlights

130 கோடி மக்களை வழிநடத்தும் பாரதப் பிரதமர் அவர்களை, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்திபடுத்த, எங்களது ஒப்பற்ற தலைவரை, ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுகவின் அரசியல் புரோக்கர் எஸ்ரா.சற்குணம் அவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தேர்தல் சமயம் வந்தாலே, ஏதோ கிடைக்கும் காசுக்காக, பல பேருக்கு காசு வாங்கிக் கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செயல்படும் எஸ்ரா.சற்குணம் அவர்கள், மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.  உலகமே போற்றுகின்ற உத்தமத் தலைவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, உங்களைப் போன்ற குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையான ஒன்று. குடும்ப அரசியலுக்கு கைக்கூலியாக வேலை பார்த்து, கிடைக்கும் பலனை அனுபவித்துக் கொண்டு, தமிழக மக்களையும், தன் மதம் சார்ந்த மக்களையும், தன் சுயநலத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து, ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு எவ்வளவு கேவலமானது என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். 

130 கோடி மக்களை வழிநடத்தும் பாரதப் பிரதமர் அவர்களை, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்திபடுத்த, எங்களது ஒப்பற்ற தலைவரை, ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.இதே போன்று, இந்து சமுதாய மக்களை, பழக்கவழக்கங்களை எஸ்ரா.சற்குணம் பலமுறை பழித்துப் பேசியுள்ளார். பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வயது முதிர்ந்த நிலையில், அறிவுள்ள ஒரு மனிதருக்கு, நிதானம் இருக்கும், அனுபவம் இருக்கும்,  பொறுமை இருக்கும். இந்த மூன்றையும் இழந்த எஸ்ரா.சற்குணம் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

தங்களை திருப்திபடுத்துவதற்காக எஸ்ரா.சற்குணம் போன்றவர்கள் தரம் தாழ்ந்து பேசுவதை, நடந்துகொள்வதை, மேடையில அமர்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, வேதனையான ஒன்று. எஸ்ரா.சற்குணம் போன்ற அரசியல் புரோக்கர்களின் நடவடிக்கைகளை, மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களது மதம் சார்ந்த ஒருதலைபட்சமான விமர்சனங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் சேர்த்து மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!