Seeman: செருப்புக்கு என்ன மரியாதையோ... அதே தான் சீமானுக்கும்...! போட்டு தாக்கிய ஈவிகேஎஸ்...

By manimegalai aFirst Published Dec 25, 2021, 7:09 PM IST
Highlights

சீமான் கையில் எடுத்த காட்டிய பொருளுக்கு உரிய மரியாதை தான் அவருக்கும் என்று கடுமையாக பேசி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

சென்னை: சீமான் கையில் எடுத்த காட்டிய பொருளுக்கு உரிய மரியாதை தான் அவருக்கும் என்று கடுமையாக பேசி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் ஒரு திமுக, நாம் தமிழர் கட்சி இடையே மோதல் மூண்டு முற்றி வருகிறது. திமுகவையும், அதன் தலைவர்களை பற்றி தொடர்ந்து மரியாதையின்றி, அருவருக்கத்தக்க வகையில் சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் பேசி வருவதே இதற்கு காரணம்.

வழக்கமாகவே மேடைதோறும் கழுத்து நரம்பு புடைக்க பேசும் சீமான், கடந்த 1 வாரமாக கொந்தளித்து போய் திமுகவை மேலும், மேலும் சாடி வருகிறார். அவரின் எடக்கு மடக்கான பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் சீமானும், அவரது கட்சி பிரமுகர்கள் பேசும் கூட்டங்களுக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் சீமானுக்கு எதிராக முழக்கமிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சீமானின் செருப்பு போஸ் குறித்து தொடர்ந்து பல்வேறு விதமாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஒரு தலைவர், தொண்டர்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர் இப்படி செருப்பை கையில் எடுத்து வைத்துக் கொண்டு மேடையில் அனைவர் முன்னிலையில் பேசலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு தரப்போ, சீமானுக்காக மல்லுக்கட்டி திமுகவையும், அதன் கட்சியினரையும் இணையத்தில் கொத்து பரோட்டாவாக்கி வருகிறது. நிலைமை இப்படி எதிரும், புதிருமான தறிகெட்டு ஓடிக் கொண்டு இருக்க… சீமானின் கருத்துக்கும் செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கூட்டணி உருவானபோது ராகுல் காந்தியை பிரதமராக மேடையில் முன் மொழிந்தவர் ஸ்டாலின். திமுக, மதசார்பற்ற கட்சிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

அப்போது அவரிடம் சீமான் பேச்சு, அவர் மேடையில் செருப்பை எடுத்து காட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அந்த பொருளுக்கு (செருப்பு) என்ன மரியாதையோ…. அதே மரியாதை தான் அவருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நெத்தியடியாக பதில் கூறுவது ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஸ்டைல். கொள்கை ரீதியாக நேர் எதிர் தளத்தில் இயங்கும் நாம் தமிழர் கட்சி பற்றி என்றால ஈவிகேஎஸ் பாணியே தனியாக இருக்கும். இப்போதும் அதே போன்றதொரு நெத்தியடி பதிலை தான் கூறி இருக்கிறார் என்று குஷியில் இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த பதில் நாம் தமிழர் கட்சியை கடும் கோபத்தில் கொண்டுபோய் விட்டிருப்பதாக கூறப்படுகிறது. இனி அடுத்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், காங்கிரசுக்கும் பதிலடி கிடைக்கும் என்று கூறுகின்றனர் நாம் தமிழர் தம்பிகள்…!!

click me!