கோழி திருடியவனும் கூட விருந்து குலவுகிறான்... பாஜகவை போட்டுத்தாக்கிய கி.வீரமணி..!

By Thiraviaraj RMFirst Published Dec 6, 2021, 3:41 PM IST
Highlights

‘’கோழி திருடியவனும் கூட விருந்து குலவுகிறான்’’ என்ற ஒரு கிராமியப் பழமொழிக்கேற்ப, டாக்டர் அம்பேத்கரை தாங்களும் கொண்டாடுவதாக ஒரு பிரமாதமான நடிப்புச் சுதேசியமும் செய்கிறார்கள் 

கோழி திருடியவனும் கூட விருந்து குலவுகிறான் என அம்பேத்கரை கொண்டாடும் பாஜக பற்றி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சமூகப் புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று!

திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அயோத்தியில் மற்ற சக அமைப்புகளைத் தூண்டிவிட்டு, களத்தில் இறக்கி கடைசிவரை அதிகாரப்பூர்வமாக தாங்கள் நேரிடையாக பாபர் மசூதி இடிப்பில் பங்கு கொள்ளாது, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற மற்ற அமைப்புகளையே பங்கு பெறச் செய்து, அன்றைய பிரதமர் நரசிம்மராவ், உத்தர பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் முதலியவர்களின் மறைமுக, நேரிடை ஆதரவுகளை வைத்து ‘’கச்சிதமாக’’ அதனை முடித்த நாள் டிசம்பர் 6 ஆம் தேதி.

அந்த நாளை அவர்கள் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம், அது டாக்டர் அம்பேத்கரின் மறைவு நாள் - நினைவு நாள் என்பதே! ‘’கோழி திருடியவனும் கூட விருந்து குலவுகிறான்’’ என்ற ஒரு கிராமியப் பழமொழிக்கேற்ப, டாக்டர் அம்பேத்கரை தாங்களும் கொண்டாடுவதாக ஒரு பிரமாதமான நடிப்புச் சுதேசியமும் செய்கிறார்கள் - இந்த அரசியல் வித்தைக்காரர்கள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

ஜாதி அழிப்பு பற்றி - ஹிந்து மதம் என்பதைவிட்டு, சுமார் 5 லட்சம் பேருடன் வெளியேறி, புத்த மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் டாக்டர் அம்பேத்கர் நாகபுரியில். ஜாதியை அழிக்க - டாக்டர் அம்பேத்கர் எப்படிப்பட்ட வழியைக் காட்டுகிறார். ஜாதியை அழிக்க அம்பேத்கர் காட்டும் வழி. படியுங்கள் தோழர்களே, மனதில் பாடமாகக் கொள்ளுங்கள். ‘’ஜாதியை அழிப்பதன் வழிகளும், கருவிகளும் குறித்த இந்தக் கேள்விக்கு நான் அதிக அழுத்தம் கொடுத்திருக்கிறேன்.

ஏனெனில், லட்சியத்தைத் தெரிந்து கொள்வதைவிட அதை அடைவதற்கான வழிமுறைகளையும், உபகரணங்களையும் (கருவிகளையும்) அறிந்து கொள்வது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு வழிமுறைகளும், உபகரணங்களும் தெரிந்திருக்கவில்லை என்றால், உங்களுடைய அனைத்துத் தாக்குதல்களும் குறி தவறித்தான் போகும் என்பது திண்ணம்.’’ இந்த வழிமுறை உபகரணம்தான் ஜாதி அழிப்புப் போராட்டங்கள்.

எனவே தோழர்களே, ஜாதி- தீண்டாமை அழிக்கப்பட்டு, சமத்துவமும், சுதந்திரமும், சுயமரியாதையும், மனிதத் தன்மையும், பகுத்தறிவும் நிலவ வேண்டுமானால், ஜாதி அழிப்புக்கான போரில்... ஜாதி அழிப்பு அறப்போரில் ஈடுபட ஆயத்தமாகுங்கள்! ஜாதி அழிப்புக்கான போரில் கட்டுப்பாடு மிக்க - இராணுவ வீரனாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஜாதி - தீண்டாமையை உருவாக்கும் நோய்க் கிருமிகளை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்கும் பணியில் ஓய்வின்றி ஈடுபடுங்கள்; அல்லது ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள் - அதுவும் முடியாவிட்டால் ஒதுங்கியிருங்கள் - குறுக்குச்சால் ஓட்டாதீர்கள்! வெறுமனே டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதும், படத்திற்கு மாலை அணிவிப்பதும் மட்டும் போதாது. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் என்ற இருபெரும் புரட்சியாளர்களின் பணி முடிக்க களம் காணுவதில் கலந்துகொள்ளத் தயங்காதீர்கள்!

ஜாதி அழிப்பே அத்தலைவர்களுக்கு இனி நாம் சூட்டும் வாடாத வண்ண மலர் மாலையாகும்! அதுவே சிறந்த மலர்வளையமுமாகும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!