வெங்காய விலை உயர்வைப் பத்தி இந்த அரசுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா ? ஸ்டாலின் காட்டம் !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2019, 6:15 AM IST
Highlights

மற்ற மாநிலங்கள் வெங்காய விலை நெருக்கடியை சமாளித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு வெங்காய விலை உயர்வு குறித்து கொஞ்சம் கூட கவலையில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் விலையை நினைத்துப்பார்த்தாலே கண்ணீர் வருகிறது என தெரிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்றைக்கு கிடுகிடு விலையை வேகமாக எட்டிப்பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டுவிட்டது.


இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலையும் கூடிவிட்டது.

கடலூரில் 2 நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாக கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்கு பதிலாக வெங்காயம் கொடுத்ததாக வாட்ஸ்அப்பில் தகவல் வருகிறது. 

வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். வெங்காயம் வாங்குற அளவுக்கு நீங்க பணக்காரங்களா? என்கிறது ஒரு மீம்ஸ். இப்படி வானத்தை தொட்டுவிட்டது, வெங்காயத்தின் விலை.

இவை நாட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அல்ல; நாம் கண்ணெதிரே அன்றாடம் காணும் எதார்த்தமான நிகழ்வுகளாக, உண்மைக் காட்சிகளாக இருக்கின்றன. மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகிவிட்டது.


இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனை குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை. இதெல்லாம் நம்முடைய வேலையா? என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?. இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடி தான் என்று முதலமைச்சர்  பேட்டி கொடுத்திருக்கிறார். 

ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்கு சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் வினியோகத்திற்கு செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கிவிட்டது.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், வினியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் தனிமைப்படுத்தப்பட்டு போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

click me!