தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Sep 16, 2022, 12:35 PM IST
Highlights

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்வதாக தெரிவித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக போராட்டம்

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், மின் கட்டணத்தை உயர்த்தி திமுக அரச மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்தார். 200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு அதிமுக ஆட்சியின் போது 170 ரூபாய் செலுத்தியதாகவும், தற்பொழுது 225 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். 300 பயன்படுத்துபவர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 530 மின் கட்டணமாக செலுத்தி வந்தநிலையில், திமுக ஆட்சி காலத்திலோ 675 மின்கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மருத்துவ உள் ஒதுக்கீடு எனது திட்டம்

400  யூனிட் பயன்படுத்துபவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் 800 ரூபாய் கட்டணமாக கட்டி வந்தனர். திமுக ஆட்சியில் 1375 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இதன் காரணமாக சாதாரண மக்களும், நடுத்தர மக்கள் வரை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வானது திமுக மத்தியில் அமைச்சரவையில் இருந்த போதுதான் கொண்டுவரப்பட்டது.  அப்போது மத்திய அமைச்சராக காந்திசெல்வன் இருந்தார்.  நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தொடர் போராட்டங்களை நடத்தியது.  இந்த நிலையில் தான் அரசு பள்ளி மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பயிற்சி வகுப்புகளும் அதிமுக ஆட்சியில்  நடத்தப்பட்டது. 7.5% சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக இந்த ஆண்டு மட்டும் 569 மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கட்சிகளோ பொதுமக்களோ கோரிக்கை வைக்கவில்லை எனது மனதில் உதித்த திட்டம் தான் 7.5% இட ஒதுக்கீடு என கூறினார்.

தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்

மக்களின் எண்ணங்களின் துன்பங்களையும் புரிந்து கொள்ள இயலாத அரசாக திமுக அரசு இருப்பதாக விமர்சித்தார். பொங்கல் பரிசு என திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்தவர்,  அந்த பொங்கல் பரிசு எப்படி இருந்தது என்பது அதை வாங்கிய மக்களுக்கு நன்றாகவே தெரியும் என கூறினார்.  உருகிய வெல்லமும், இலவம் பஞ்சும் கொட்டை தான் பொங்கல் தொகுப்பில் இருந்ததாக விமர்சித்தார். மக்களின் நன்மைக்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.  ஆனால் திமுக அரசு மினி கிளினிக் அனைத்தையும் மூடியுள்ளதாக தெரிவித்தார். எனவே மக்கள் பயனடையும் வகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.வசூல் செய்வதில் மன்னன் தமிழக முதலமைச்ச மு க ஸ்டாலின் என்றும் விமர்சித்தார் .

இதையும் படியுங்கள்

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்

click me!