அதிமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும்... எல்லா இடத்திலும் ஜெயம்தான்.. தெறிக்க விடும் குஷ்பு!

By Asianet TamilFirst Published Mar 21, 2021, 8:48 PM IST
Highlights

அதிமுக அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனை நினைவுபடுத்தினாலே போதும், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்று ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறங்கியுள்ளார். தினந்தோறும் காலை 8 மணியில் தொடங்கி இரவு 10 மணி வரை குஷ்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது தேர்தல் வெற்றி தொடர்பாக குஷ்பு பேட்டி அளித்துள்ளார். “ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவுக்கு ஏன்தான் வாக்களித்தோம் என்று மக்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். தேர்தலுக்கு பிறகு தொகுதிக்கே வரவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். திமுக இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்றுதான் நான் பார்க்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் சவால் என்று எனக்கு எதுவும் இல்லை.
மத்திய, மாநில அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதுதான் இங்கே எதிர்க்கட்சியின் ஒரே வேலையாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், தமிழகத்தில் பாஜக ஏற்கனவே காலூன்றி விட்டது. அதிமுக அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனை நினைவுபடுத்தினாலே போதும், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுவிடும்.

 
இன்றைக்கு இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்யாததை பாஜக செய்து வருகிறது. பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரம் வழங்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, மேனகா காந்தி, தமிழிசை உள்ளிட்ட ஏராளமான பெண்களுக்கு நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வழங்கி பாஜக அழகு பார்க்கிறது. அந்த கட்சியின் பிரதிநிதியான எனக்கு ஆயிரம்விளக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால், அவர்களின் முன்னேற்றத்துக்காக நானும் பாஜகவும் பாடுபடுவோம்.” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

click me!