துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த இஞ்சினீயர்கள், பட்டதாரிகள்!

By Selvanayagam PFirst Published Sep 28, 2019, 8:22 AM IST
Highlights

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில், பெருக்குபவர் மற்றும் துப்பரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான இஞ்சினீயர்கள், பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் 10 பெருக்குபவர் மற்றும் 4 துப்புரவுப் பணியாளர்கள் என 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கல்வி தகுதி குறிப்பிடப்படாமல், உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இடஓதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில், சம்பள விகிதம் 15 ஆயிரத்து 700 ரூபாய் என்றும், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு, பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.ஈ படித்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 930 பேருடைய விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவர்களுக்கான நேர்காணல், கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் என்ற அடிப்படையில், 40 நாட்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

இந்த விபரங்கள் வெளியான போது, தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்மையால் தான் பிஇ பிடெக் எம்டெக் படித்தவர்கள் துப்பரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்தது . இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் 23 ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இஞ்சினீயரிங் மற்றும் பட்டப் படிப்பு படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேலைநாட்களை குறைத்துவருகின்றன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தற்போது துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவே இருப்பதாக குமுறுகிறார்கள் பட்டதாரிகள்.

click me!