நாக்கை தொங்கப் போட்டு ஒரு கூட்டம் அலையுது.. வாய்ப்பு கொடுக்காதீங்க, கூட்டணி கட்சி தலைவரை எச்சரித்த முரசொலி..!

By vinoth kumarFirst Published Sep 14, 2022, 1:43 PM IST
Highlights

 வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் ’என முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது, எதிரிகள் வாய்க்கு அவலாகிவிடும் என்று முரசொலி கூறியுள்ளது. 

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  மின் கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது. இதனை தோழர் கே.பாலகிருஷ்ணன் நன்கு உணர்வார். 

மேலும், மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்காது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர் கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர் அதனையும் கே. பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான  அரசு மின்கட்டண உயர்வை வேறு வழியற்ற நிலையில்தான் அறிவித்திருக்கும் என்பது நமக்கும் தெரியும். 

எந்த மக்கள் நல அரசும் அது திமுக  அரசாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது. இப்படி இக்கட்டான சூழல் உருவாகும் போது இந்த கட்டண உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க இடம் இல்லை.

அதனை மனதில் கொண்டுதான் தமிழக அரசின் மின்வாரிய கட்டண உயர்வை அறிவித்தபோது நூறு யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு எந்தவிதக் கட்டண உயர்வும் இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. கேரள அரசு
51 லிருந்து 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாய் 70 காசாக  இருந்த கட்டணத்தை 3 ரூபாய் 90 காசாக உயர்த்தியது. 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு கூட அங்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு போன்றவற்றின் விண்முட்டும் விலைவாசி உயர்வால் நொந்து நுலாகி இருக்கும் கேரள மக்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி சுமையைக் கூட்ட மனதளவில் கேரள அரசுக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த நிலைக்கு அந்தத அரசு தள்ளப்பட்டுள்ளது என்பதை தோழர் பாலகிருஷ்ணன் போன்றோர் அறிந்தால் தான் அப்போது அவர் குறித்து கருத்தறிவிக்கவில்லை. கேரள அரசின் நிலைமை வேறு: இப்போது மட்டுமல்ல: இதற்கு முன் ஐந்தாண்டு கால மாகவும் தோழர்  பாலகிருஷ்ணனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி தான் கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலோ கழக அரசுக்கு முன் பத்தாண்டு காலம் தொடர்ந்து நடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் கோளாறினால் திமுகழகத் தலைவர் தளபதி எடுத்துக்க காட்டியது போல; 'கமிஷன். கரப்ஷன், கலெக்ஷன் என்பதை மட்டுமே குறிக் கோளாகக் கொண்ட ஆட்சி நடந்ததாலும் தமிழக அரசின் காலியானது மட்டுமின்றி. பல லட்சம் கோடி கடன் சுமையும் அதற்கான வட்டி என்ற நிலையில் ஆட்சியைத் துவாங்கியது கழக அரசு. தேர்தனுக்கு முன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, படிப்படியாக நிறைவேற்றி, ஏறத்தாழ 75 சதவீத வாக்குறுதிகளை ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ளது தி.மு.கழக அரசு! கடுமையான நிதி வறட்சி இருந்தும் கூட கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியே தீருவோம் என சூளுரைத்துள்ளார் கழகத் தளபதி. வரி விதிக்காது சில கட்டண உயர்வுகளை ஏற்படுத்தாது எந்த அரசும் திடமாக இயங்க இயலாது. 

வரி விதிப்பு ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்கு வலி ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது! Tap the rich pat the poor' - இதுதான் வரி விதிப்புக்கு அண்ணா கற்றுத் தந்த பாடம்-1. Tap the rich என்பதற்கு விளக்க மளிக்கையில் வண்டுகள் மலர்களில் தேனை உறிஞ்சுவது போல பணக்காரர்களிடம் இருந்து நோகாது பெற்று ஏழை, எளிய மக்களை வாழ்விக்க வேண்டும் என்றார் அண்ணா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு போல “Crush the poor. nourish the rich" அதாவது ஏழைகளை நாக்கி, பணம் படைத்தோரை போஷிக்கும் வரி விதிப்பும் கொள்ளையல்ல தி.மு.க. அரசுக்கு! அரசியல் நடப்புகளை பல ஆண்டு காலங்களாக கூர்ந்து கவனித்திடும் தோழர் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் நிச்சயம் உணர்வார். 

நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரகங்களில் நம்மை நோக்கித் திரும்பி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை. தி.மு.க. கூட்டணிக் கட்சியாயிற்றே! இந்த மின்கட்டண உயர்வால் அந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தோழர் பாலகிருஷ்ணன் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம்!

 

ஆனால், கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சி களுக்குமிடையே ‘சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் விடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல! பேனைப் பெருமா வாக்கி அதனை பெத்த பெருமானாக்கிடுவதில் வல்லமை வாய்ந்த கூட்டம் அது. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் ’என முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.

click me!