
5 மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 27-ஆம் தேதியும், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, 5 மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கும் மத்திய பட்ஜெட்டிற்கு பின் இந்த தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு படை, மற்றும் மாணவ-மாணவர்களின் தேர்வு தேதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது பல கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.