டி.கே சிவகுமார் கைது செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது… எடியூரப்பாதான் சொல்கிறார் !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2019, 9:03 AM IST
Highlights

பண மோசடி தடுப்பு வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டது தனக்கு  மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை என  அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் நீர்பானத்துறை அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். அம்மாநிலத்தின் மிகப் பெரிய தொழிலதிபராகவும் அவர் அறியப்படுகிறார், கர்நாடகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருக்கு பல் வேறு தொழில்கள் உள்ளன.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான பிரமுகராக விளங்கி வரும் டி.கே.சிவகுமார், கிங் மேக்கராகவும் உள்ளார்.  குமாரசாமி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில்  டி.கே.சிவகுமார் மற்றும் ஒரு சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்தது.

மேலும் கடந்த ஆண்டு சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.


இதையடுத்து பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை  முன்பு கடந்த வாரம் சிவகுமார் ஆஜரானார். தொடர்ந்து 5 நாட்களாக அவரிடம் விசாரனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். 

சிவகுமார் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா , என் வாழ்க்கையில் நான் யார் மீதும் பழிவாங்கும் அரசியல் நடத்தியது இல்லை. நான் யாருக்கும் கெட்டது செய்தது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டம் தன் கடமையை செய்யும். டி.கே.சிவக்குமாரின் கைது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். அவர் வெளியில் வந்தால் மற்றவர்களை விட நான் தான் அதிக மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்தார். 

click me!