ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, பன்னீரை முதல்வர் நாற்காலியிலிருந்து இறக்கிவிட்ட சசிகலா ஜெயிலுக்கு போகும் முன் எடப்பாடியை முதல்வராக நியமித்ததார். இரட்டை இலை, கட்சியை காப்பாற்ற இருவரும் ஒன்று சேர்ந்தாலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் என இன்னும் இவர்கள் பிரிந்தே தனித்து செயல்படுவதும் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதும் அப்பட்டமாகவே தெரிகிறது.
ஆனாலும், இரண்டு தரப்பினர்களும் இதனை மறுத்தனர். ஒன்றுபட்ட அதிமுக அதிக பலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக காட்டப்படும் மணி மண்டபத்திற்காக சமீபத்தில் கூட பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழா ஒன்றின் அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இல்லை.
செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் நடைபெறும் கோவில்பட்டி நகராட்சிக்கான 2வது பைப்லைன் திட்ட பணிகளின் தொடக்க விழா இன்று நடைபெறவுள்ள நிலையில். இந்த விழவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டப்பணிகளை தொடக்கி வைப்பார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் இந்த அழைப்பிதழில் இடம்பெறவில்லை. ஆனால் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட பல அமைச்சர்களின் பெயர்கள் இந்த அழைப்பிதழில் இருக்கும் நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் பெயர் மட்டும் இதில் மிஸ் ஆகியுள்ளது அதிமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதனால் ஒபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான மோதல் இருப்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை அதிமுகவினர் மறுத்துள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.