எடப்பாடி பழனிசாமியா.? ஓ.பன்னீர்செல்வமா.? ஆட்டுகதையை கூறி பூங்குன்றன் கிளப்பிய புதிய சர்ச்சை..!

By vinoth kumarFirst Published Aug 16, 2023, 11:33 AM IST
Highlights

சிதறிய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து வந்தன. ஆடுகள் சண்டை போட்டுக்கொண்டு மூலைக்கொன்றாய் நிற்பதைப் பார்த்து, எறும்புக் கூட்டம் “ஹ ஹ ஹா” என்று சிரித்தது. 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முகநூல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ராமன் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வந்தான். அந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தைக்கு சென்ற ராமன் செம்மறி ஆடு ஒன்றை வாங்கி வந்தான். செம்மறி ஆடு கொழு கொழுவென்று மிகவும் அழகாக இருந்தது. அதனால் ராமனுக்கு அதன் மேல் கொள்ளை பிரியம். அதனை நன்கு கவனித்துக் கொண்டான். அதனால் மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன. அதனால் செம்மறி ஆட்டை தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒன்றாக சேர்ந்து கொண்டு செம்மறி ஆட்டை விரட்டி விரட்டி முட்டின. எப்போதும் வெள்ளாடுகள் செம்மறி ஆட்டை எதிரியாகவே கருதின. 

ராமன் ஆடுகளுக்கு குடிக்க தண்ணீர் வைத்தான். உடனே ஆடுகள் முண்டியடித்து கொண்டு தண்ணீரைக் குடித்தன. கூடவே செம்மறி ஆடும் தண்ணீரைக் குடிக்க வந்தது. கோபம் கொண்ட வெள்ளாடுகள், செம்மறிக்கு இடம் தராமல் மறித்துக்கொண்டு தண்ணீர் குடித்தன. செம்மறி ஆடு பசியால் மீண்டும் மீண்டும் தண்ணீர் பருக முயற்சித்தது. அதனால் மற்ற ஆடுகள் செம்மறி ஆட்டை முட்டித் தாக்கத் தொடங்கின. இந்த சண்டையில் தண்ணீர் தொட்டி உடைந்து, தண்ணீர் வெளியேறியது. செம்மறி ஆடு பசியால் துடித்தது. வெள்ளாடுகளும் போதிய தண்ணீர் குடிக்காததால் எரிச்சல் அடைந்தன.

அப்போது உடைந்த தொட்டியில் இருந்து சிதறிய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து வந்தன. ஆடுகள் சண்டை போட்டுக்கொண்டு மூலைக்கொன்றாய் நிற்பதைப் பார்த்து, எறும்புக் கூட்டம் “ஹ ஹ ஹா” என்று சிரித்தது. இதை கவனித்த ஆடுகள், நாங்கள் உருவத்தில் பெரியவர்கள். எங்கள் நகத்தின் அளவுகூட இல்லை. நீங்கள் எங்களைப் பார்த்து சிரிக்கிறீர்களா?” என்று கேட்டன.

“நீங்கள் உருவத்தில் பெரியவர்களாக இருந்து என்ன செய்வது? உணவைக்கூட பகிர்ந்து கொள்ளத் தெரியாத பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறீர்களே! ஒரே இடத்தில் வாழும்போது கூட இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். இதுதான் பெரியவர்கள் குணமா?” என்று இளக்காரமாக கேள்வி கேட்டது எறும்புத் தலைவன். வெட்கத்தால் தலைகுனிந்து நின்றன ஆடுகள்.

“நீங்களும் எங்களை மாதிரி ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்படி முட்டி மோதி, கிடைத்த உணவை வீணாக்கி இருப்பீர்களா? தனியே நிற்கும் செம்மறி ஆட்டை இப்படி ஒன்றாக சேர்ந்து கொண்டு தாக்குவீர்களா? என்று தொடர்ந்து கேள்வி கேட்டது எறும்பு தலைவன்

“ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் நண்பர்களே, உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். வெற்றி பெறுகிறீர்கள். இப்போது எங்கள் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டீர்கள். நாங்களும் இனி ஒற்றுமையாக இருப்போம்” என்று ஒன்றாக கூறின ஆடுகள். இதைப் படிச்சுட்டு வெள்ளாடு யார்? செம்மறி ஆடு யார்? என்று கேட்காதீர்கள். இது சிறுவர்களுக்கான நீதிக்கதை. ஹ ஹ ஹா..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் பிரிந்து தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் பூங்குன்றனின் இந்த பதிவு அவர்களை குறிப்பதாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும்,  செம்மறி ஆடு ஓபிஎஸ், வெள்ளாடு ஆடு இபிஎஸ் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

click me!