அம்மாவுக்காக இதக்கூட செய்யலன்னா எப்படி? சமரசமான எடப்பாடி – டி.டி.வி.தினகரன்!!

By Selvanayagam PFirst Published Dec 6, 2018, 8:13 AM IST
Highlights

பரம வைரிகள் போல் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுன் நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் சமரசம் செய்து கொண்டு செயல்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்த அக்டோபர் மாதம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி  அஞ்சலி செலுத்திய விழாவின்போது, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபின் அங்கு வந்த தினகரன் தரப்பினர் ஜெயலலிதா படங்கள் இருக்கிறது என்பதைக் கூட பொருட்படுத்தாது எடப்பாடி அணியினரின் பேனர்களை கிழித்து எறிந்தனர். இதற்காக தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 100 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் நடந்த நிகழ்வுகள் பலரையும் ஆச்சரியத்துக்கு ஆளாக்கியுள்ளன.

அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை 9.30 மணிக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார் என்றும் அதன் பின் 10 மணிக்கு அதே இடத்தில் இருந்து தினகரன் ஊர்வலம் புறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வந்து பேரணி சென்று அஞ்சலி செலுத்தி முடிக்கவே 12 மணி ஆகிவிட்டது. அதுவரை காத்திருந்த டிடிவி தினகரன் தரப்பினர். 12 மணிக்கு மேல் மெரினாவுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்கள் வந்து சென்ற பிறகு தினகரன் அணியினர் தங்கள் கைகளில் பிளக்ஸ் பேனர்களை எடுத்து வந்தனர். அவற்றை எடப்பாடி தரப்பு வைத்திருந்த பேனர்களின் மீது சரியாக வைத்து கட்டினர்.

இரு தரப்பினரின் பல பேனர்கள் சொல்லி வைத்த மாதிரி ஒரே அளவில் இருந்தது. எடப்பாடி அணியினரின் பேனர்கள் மீது தினகரன் அணியினர் தங்கள் பேனர்களை வைத்து கயிற்றால் கட்டும்போது போலீசாரும் இருந்தனர். ஆனால் யாரும் தினகரன் அணியினரைத் தடுக்கவில்லை. சாலையின் செண்டர் மீடியனில்  நடப்பட்டிருந்த அதிமுக கொடிகளை அப்படியே பிடுங்கி படுக்க வைத்துவிட்டு, அமமுகவின் கொடிக் கம்பங்களை நட்டார்கள். இந்த விவகாரத்திலும் இரு தரப்பினருக்கும் எந்த மோதலும் நடக்கவில்லை.

இந்த அளவு அமைதியாகவும், இணக்கமாகவும் நடந்தது எப்படி என்று விசாரித்தபோது, “ பேனர்கள் வைப்பதிலும், அஞ்சலி செலுத்தப்போகும் நேரத்திலும் சிறிதும் மோதல் வந்துவிடக்கூடாது என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முந்தின நாள்  இரவே நடுநிலையான ஆட்கள் மூலமாக தினகரனுடன் சமரசம் பேசிவிட்டாராம்.

மற்ற எதில் வேண்டுமானாலும் மோதிக் கொள்ளலாம் ஆனால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விஷயத்தில் பிரச்னைகள் என்று வந்துவிடக் கூடாது என்று இரு தரப்பினருமே நினைத்ததால் இந்த தற்காலிக சமரசம் எட்டப்பட்டதாக தெரிகிறது.

click me!