எடப்பாடி பழனிச்சாமி எந்த குறையும் வைக்கவில்லை.. ஆயிரம் விளக்கில் அதிரடி காட்டும் குஷ்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 19, 2021, 1:20 PM IST
Highlights

அதிமுக பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த குறையும் வைத்ததில்லை. ஆயிரம்விளக்கு தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை மின்சார பிரச்சனை கழிவுநீர் பிரச்னை இது போன்ற பிரச்சனைகளை நிச்சயம் என்னால் தீர்த்து வைக்க முடியும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் எப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியில் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில். அதிமுகவுடன் கைகோர்த்து தமிழக பாஜக வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கென தமிழகத்தில் தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என அக்கட்சியினர்  தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 

அவர் இன்று காலை சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்திலிருந்து ஆயிரம் விளக்கு தொகுதி பிரச்சாரத்திற்காக புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது, அதிமுக பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த குறையும் வைத்ததில்லை.

ஆயிரம்விளக்கு தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை மின்சார பிரச்சனை கழிவுநீர் பிரச்னை இது போன்ற பிரச்சனைகளை நிச்சயம் என்னால் தீர்த்து வைக்க முடியும். ஒரு பெண்ணாக ஏன் என்னால் சாதிக்க முடியாது, பெண் என்றால் வீட்டில் மட்டும்தான் இருக்க வேண்டுமா? சமுதாயத்தில் வந்து சமூக நல பணிகளை ஆற்ற கூடாதா, ஒரு பெண்ணால் அனைத்தையும் சாதிக்க முடியும். பிரதமர் மோடி அவர்கள் நிறைய திட்டங்களை தீட்டியுள்ளார் அதனை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

சேப்பாக்கத்தில்  பொறுப்பாளராக போட்டதினால் தான்  அந்த இடத்தில் நான் பணியாற்றினேன். ஆனால் தலைமை ஆயிரம் விளக்கு பகுதியை எனக்கு கொடுத்துள்ளது. திமுகவைப் போன்று வாரிசுகளுக்கு எல்லாம் சீட் கொடுப்பது போன்று இல்லை ஏற்கனவே கட்சியில் பணியாற்றி உள்ளேன். ஆகவேதான் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆயிரம் விளக்கு பகுதியில் மட்டும் தாமரை மலராது தமிழகம் முழுவதும் தாமரை இரட்டை இலை கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!