
டெல்டா பாசன விவசாயத்துக்காக காவிரியில் இருந்து தண்ணிர் திறந்துவிடுமாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை , எடப்பாடி கெங்களூரு நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார். இபிஎஸ்ன் இந்த விசிட் கைகொடுக்குமா என விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் விசாரணையை முடித்து, வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் சில மாங்களுக்கு மன் பெய்த மழையில் மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீரை நம்பி , காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சம்பா பயிரை பயிரிட்டு விட்டு, தண்ணீர் இல்லாமல் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
மொத்தம் உள்ள சுமார் 25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளன. இந்தப் பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் தண்ணீர் உடனடியாக தேவைப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 தினங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.அந்தக் கடிதத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு 7 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டு இருந்தார்.
ஆனால் அதை ஏற்று தண்ணீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மறுத்து விட்டார்.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாவிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்டா மாவட்டங்களை சோர்ந்த அமைச்சர்கள் நேரில் சென்று வலியுறுத்த நாள் மற்றும் நேரம் கேட்டு, கர்நாடக மாநில அரசு தலைமைச்செயலாளர் மற்றும் கர்நாடக முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் எடப்பாடி மற்றும் சித்தராமையா சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாவது பேசி தண்ணீர் பெற்றுத்தந்தால், கருகும் பயிர்கள் காப்பாற்றப்படும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் மனதில் எடப்பாடி நிலைத்து நிற்பார்.