#BREAKING மக்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி... மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 8:07 PM IST
Highlights

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக மேலும்  ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்தை மக்களே கணக்கிட்டு செலுத்தும் படி தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால், தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக 24.05.2021 முதல் 31.05.2021 முடிய தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது:

அ) தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.05.2021 முதல் 31.05.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை 15.06.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

ஆ) மேலும், ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், டெபிட்/கிரெடிட் கார்டு, பிபிபிஎஸ் (BBPS) முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்ட்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

இ) 10.05.2021 முதல் 31.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019-ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே உத்தேச கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் அல்லது மே 2019 மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள் மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி, அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செலுத்த வேண்டிய உத்தேச மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது மே 2021-ற்கான உத்தேச கட்டணம் சூலை 2021-ல் முறைபடுத்தப்படும்.

ஈ) ஏப்ரல் 2021 மாத மின்கட்டணம் செலுத்தாத உயர்மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன் கூடிய மின்துண்டிப்பின்றி காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

உ) சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகர்வோர்களுக்கான கூடுதல் வைப்புத் தொகை கேட்பு செலுத்த 15.06.2021 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!