மணல் வியாபாரியுடன் கைகோர்த்த துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த்... என்ன நடக்கிறது திமுக ஆட்சியில்..?

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2021, 11:45 AM IST
Highlights

ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்களை கடந்துள்ள நிலையில் துரைமுருகன் மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து தனது ‘கடமையை’ ஆரம்பித்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவி ஏற்றுக் கொண்டபின் சொந்த தொகுதியான காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது கட்சித் தொண்டர் ஒருவர் காரில் இருந்த துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய விரும்பினார். காருக்குள் இருந்த துரைமுருகன் மீது சால்வையை போர்த்தினார். அப்போது அந்த சால்வையை தூக்கி வீசிய துரைமுருகன் ‘’சால்வை போடாதய்யா... கொரோனா வந்து கொண்டு இருக்கு...’’என அவமதித்து சென்றார். இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது.

 

திமுகவின் எளிய தொண்டனின் மரியாதையை ஏற்றுக்கொள்ளாத அதே துரைமுருகன் தான் மணல் மாஃபியா ஒருவரை வீட்டிற்கு அழைத்து தனது மகனுடன் சேர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார் அந்த மணல் வியாபாரி புதுக்கோட்டையை சேர்ந்த கரிகாலன். வாயிலாக மணல் குவாரிகளை நடத்த, மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும் நீர்வளத்துறை மூலமாக மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. குவாரிகளில் மணல் அள்ளி, கிடங்குகளில் கொட்டி விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக 'எம் - சாண்ட்' விற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அவசர அவசரமாக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன் வீட்டிலேயே, இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில், பணமாற்ற சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் ஒருவரின் நிறுவனத்திற்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் நெருக்கமானவர்கள் என்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் மணல் அள்ள, மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள், அந்தந்த மாவட்டங்களில் சிறிய ஒப்பந்ததாரர்கள் வழியாக, பிரச்னையின்றி ஆறுகளில் குவாரிகள் அமைத்து, மணல் அள்ள அறிவுறுத்தப்பட உள்ளது. ஆக, ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்களை கடந்துள்ள நிலையில் துரைமுருகன் மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து தனது ‘கடமையை’ ஆரம்பித்துள்ளார். நல்லாட்சி முழக்கத்தோடு ஆட்சியை ஆரம்பித்து நாலாபுறமும் அப்ளாஸ்களை அள்ளி வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், சீனியர் அமைச்சரான துரைமுருகனின் செயல்பாடுகள் அதிர்ச்சையை கிளப்பி உள்ளன. இதனால் உடன் பிறப்புகளே ‘’ என்ன நடக்கிறது நமது திமுக ஆட்சியில்..?’ என நொந்து கொள்கின்றனர். 

click me!