
முறைகேட்டை பயன்படுத்தி இரட்டை இலையை எடப்பாடி தரப்பு பெற்றிருந்தாலும் அதை திரும்பவும் மீட்டெடுப்போம் என டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை.
அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பன்னீர் தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தரப்பு ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், முறைகேட்டை பயன்படுத்தி இரட்டை இலையை எடப்பாடி தரப்பு பெற்றிருந்தாலும் அதை திரும்பவும் மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு வந்ததும் மேல்முறையீடு செய்வது இல்லையா அதுபோல தான் இதுவும் நிரந்தரமில்லை என குறிப்பிட்டார்.