
தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து வாங்கிய சம்பளத்தில் ஒருபகுதியை குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக நடிகர் விஜய் சேதுபதி, தமிழக அரசிடம் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளதையடுத்து அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கல்வியில் பின்தங்கி இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 744 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன். தமிழகத்தில் உள்ள 10 அரசு பார்வையற்ற பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சத்தையும், செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான 11 அரசு பள்ளிக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரமும் வழங்க உள்ளேன்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஹெலன் கெல்லர் என்கிற செவித்திறன் குறைந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.49 ஆயிரத்து 70 ஆயிரத்தை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்த அதிக மதிப்பெண் பெற்று அது முடியாமல், உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன் என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 'விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்!' எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.