
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது . அதில் இந்திய சுதந்திர தின விழாவில் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி ஜனவரி 1 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த சுற்றறிக்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை ஒன்றினை இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ளது எனக் கூறியுள்ளார். அதில் இந்திய சுதந்திர தின விழாவில் 75 ஆம் ஆண்டை ஒட்டி ஜனவரி 1 முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது, ஒரு கல்வித்துறை உயரதிகார அமைப்பு அறிவியலுக்கு விரோதமாக, புராண மூடத்தனத்தைச் சுமந்து, அதனை மாணவர்கள் தலையில் கட்டுவது அடிமுட்டாள்தனமும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதும் ஆகும் என கூறியுள்ள வீரமணி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு - விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்த அறிவிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்றும் கி.வீரமணி தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.