எஸ்.பி.பி. மரணம் எல்லா மொழி திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு... டாக்டர் ராமதாஸ் வேதனை..!

By Asianet TamilFirst Published Sep 25, 2020, 8:50 PM IST
Highlights

பின்னணி பாடகர் எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், “இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


இளம் வயதிலேயே இசைத்துறையில் அடியெடுத்து வைத்த பாலசுப்பிரமணியன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் கூடுதலான பாடல்களை பாடியவர். இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமது தேன் கலந்த குரலால் திரைப்பட பாடல்களுக்கு கூடுதல் இனிமையும், சுவையும் சேர்த்தவர். இசை உலகில் அவர் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.


திரையுலகில் 54 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் எண்ணிடலங்காத விருதுகளை வென்றவர். சாதனைகளின் உச்சங்களைத் தொட்டவர் என்றாலும் கூட, எளிமையை தனது அடையாளமாக்கிக் கொண்டவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் தேறி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை; அவரது மறைவுச் செய்தி மட்டும்தான் வந்திருக்கிறது. உண்மையாகவே எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.
அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

click me!