அவுங்கதான் அப்படி இருந்தாங்க... அந்த தவறை சரி செய்ய வேண்டாமா..? ஸ்டாலினை நெருக்கும் திருமா..!

Published : May 21, 2021, 10:11 PM IST
அவுங்கதான் அப்படி இருந்தாங்க... அந்த தவறை சரி செய்ய வேண்டாமா..? ஸ்டாலினை நெருக்கும் திருமா..!

சுருக்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் அதிமுக அரசு செய்த தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே, 7 பேரையும் விடுவிக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம். ஆனால், அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார். ஆனால், அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்க வேண்டும், எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அவர் அனுப்பியிருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.
மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே, 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்தத் தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை