ஐசியு., வீடியோ இல்லை; வார்டில் இருந்த வீடியோ இருக்கு: சிசிடிவி குறித்து டிடிவி

First Published Sep 25, 2017, 1:38 PM IST
Highlights
dont have cctv footage only having raw video taken by sasikala says ttv dinakaran


 
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவுதான் என்னிடம் உள்ளது. அவர் ஐசியு.,வில் இருந்த போது வீடியோவெல்லாம் எடுக்க முடியாது. அதனால் அது என்னிடம் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு இல்லத்தில் தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அண்மைக் கால அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் அளித்துப் பேசினார் தினகரன். அப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள் என்னிடம் உள்ளது என்று முன்னர் அவர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், “ ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ காட்சியைத் தான் நான் குறிப்பிட்டேன்.  அந்த வீடியோவை எடுத்தது சசிகலாதான். நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை ஒப்படைக்கலாம் என சசிகலா என்னிடம் கூறினார். அப்போது, ஜெயலலிதா நைட்டி அணிந்து இருந்ததால் அந்த வீடியோவை இதுவரை நான் வெளியிடவில்லை.” என்று கூறினார். 

தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு,  “கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில், 29ஆம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்வோம். அப்போது உங்களுக்கே தெரிய வரும்” என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், வானகரத்தில் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், “அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட, அ.தி.மு.க., சட்ட விதிகளில் இடம் இல்லை.  கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா உள்ளார். துணை பொதுச் செயலாளராக நான் உள்ளேன். கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், பொதுச் செயலாளர் கூட்டுவார். சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நடந்த பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என கூறியுள்ளது” என்றார்.
 
முன்னதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், குடகு விடுதியில் தங்கியிருந்த அவர்களில் சிலர் பெரிதும் வருந்தியதாகவும், மீண்டும் எடப்பாடி அணிக்கே சென்று அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முயன்ற்சி செய்வதாகவும் வந்த தகவலை அடுத்து தினகரன் காரசாரமாக பதில் அளிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. 
 

click me!