வெற்றி எண்ணில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வியெனில் துவள வேண்டியதில்லை. தொண்டர்களை தேற்றும் கமல்ஹாசன்.

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 4:48 PM IST
Highlights

வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் போட வேண்டியதில்லை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
 

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன்  கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: 

நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் போட வேண்டியதில்லை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின்  வரிகளேயே இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். தேர்தல் என்பது முடிவல்ல, மக்கள் பணியில் முடிவு என்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம், புதிய தொடக்கம், இந்த தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நாம் மிகுந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம்.

மக்கள் அன்பே நம் பலம், மக்கள் நலனே எதைக் காட்டிலும் முதன்மையானது. வெற்றி எண்ணில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வியெனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளை தொடருங்கள்.  இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நாமே தீர்வு, நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு இருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மக்களுக்காக மக்களுடன் களத்தில் நிற்போம்.  என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!