விஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை புறக்கணிப்பார்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இன்று காலை அவரது வீட்டிற்கு சென்ற கமல் அப்துல்கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்று கலாமின் பேரனிடம் நினைவு பரிசையும் பெற்றார்.
அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த திட்டத்தை ரத்து செய்தார். ஆனாலும் பள்ளியை பார்த்தபடியே அவ்வழியாக வாகனத்தில் சென்றார்.
பின்னர் ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார். பின்னர் பரமக்குடியிலும் மானாமதுரையிலும் வாகனத்தில் இருந்தபடியே பேசினார்.
இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றி கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்துள்ளார்.
அவரை சந்தித்த கமல் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு கிளம்பியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கமலின் அரசியல் கட்சி குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, விஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.