
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறையும் 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது, இத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
ஆனால், திமுக கூட்டணியில் இந்த முறை அதிக கட்சிகள் உள்ளதால் அதிகபட்சம் 5 தொகுதிகள் தான் ஒதுக்கமுடியும் என்று தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். எனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் என விசிக அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெளியில் வந்த திருமாவளவன் , தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயத்திற்கு திருமாவளவன் சென்றார். அப்போது, அவருக்கு திமுகவினர் சிறப்பாக வரவேற்றனர்.
இதனையடுத்து, திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், மு.க.ஸ்டாலினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.