உதயநிதியா ? கனிமொழியா ? திணறும் திமுக தலைமை.. உடன்பிறப்புகள் உடைக்கும் உட்கட்சி ரகசியம்..!

By Raghupati RFirst Published Dec 31, 2021, 9:30 AM IST
Highlights

திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடையே உரசல் போக்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் திமுக தலைமை தலைவலியில் தவிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2,000 இளம் பெண்கள் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுக இளைஞரணியில் இணைந்தனர். அதில் பெரும்பாலான பெண்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள். பெண்களை மகளிரணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக இளைஞரணி செயலாளராக கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம். நிர்வாகிகள் கூட்டம், உறுப்பினர்கள் சேர்க்கை என்று சுழன்று வேலை செய்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். எம்.எல்.ஏவாக அவர் இருந்தாலும் கூட கிட்டத்தட்ட அமைச்சர்களுக்கு கிடைக்கும் மரியாதையைவிட அதிகளவிலான மரியாதையே அவருக்கு கொடுக்கப்படுகிறது. 

அரசு விழாக்களில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சட்டப்பேரவையில் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலும் ‘உதயநிதி’ புகழ் பாடி வருகின்றனர் என்ற எடுத்துக்காட்டே போதும், அடுத்த வாரிசு உதயநிதி ஸ்டாலின் தான் என்று. உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவரை அமைச்சராக்குவதற்கு பல அமைச்சர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், கட்சியிலும் உதயநிதியை முன்னிலைப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞருக்கு வாரிசுகள் பலர் இருந்தாலும், அரசியல் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ஸ்டாலினும், கனிமொழியும்தான். அழகிரி ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் ஸ்டாலினின் குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

இதனாலேயே அண்மைக்காலமாக கனிமொழி பல்வேறு தருணங்களில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு வலு சேர்க்கும் பொருட்டு ஏற்கனவே நாம் கூறிய கோவை சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும், மகளிரணியில் மட்டுமே பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும் என தலைமை தெளிவுப்படுத்தியுள்ளது. 

இதையடுத்து அந்த பிரச்சினைக்கு அப்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயராக யார் போட்டியிடுவது ? என்ற கேள்வி உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடையே எழுந்துள்ளது. இதுதான் முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உதயநிதியை அமர்த்தலாம் என்று ஆலோசிக்கின்றனர் திமுக தலைமையை சேர்ந்தவர்கள். அதற்கு முன்னேற்பாடாக தான் தற்போது  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரூபா குருநாத் ராஜினாமா செய்து இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். யார் எந்த பதவியை பிடிக்கிறார்கள் என்று விரைவில் தெரிந்துவிடும்.

click me!