திமுக வைத்த ஆப்பு...! தூக்கி அடிக்கப்பட்டார் வானிலை இயக்குனர் புவியரசன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 17, 2022, 1:28 PM IST
Highlights

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பதவியிலிருந்து புவியரசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மழை பொழிவை துல்லியமாக கணிக்க நவீன உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதால், கன மழையை முன்கூட்டியே கணிப்பதில் சிக்கல் இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன், தமிழக முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனமழையை கணிக்க தவறியதால் தமிழக அரசு கடும் நெருக்கடிக்கு ஆளான நிலையில் அவர் இடமாற்றும் செய்யப்பட்டிருக்கிறார். ஆட்சி பொறுப்பு ஏற்றது முதலிருந்தே திமுக கொரோனா, மழை வெள்ளம் என அடுத்தடுத்து சவால்களை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் அரசு இயந்திரத்தை களத்தில் இறக்கி 2வது அலையை கட்டுப்படுத்தி சாதனை படைத்தார். அவரின் அந்த துடிப்பு மிக்க செயல் இன்றளவும் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து பெய்த மழை வெள்ளம் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இயந்திரம் துரிதமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மீது இருந்து வருகிறது. ஆனால் அதையும் ஓரளவுக்கு சமாளித்து நிம்மதி பெருமூச்சு விடாமுயற்சிப்பதற்குள், கடந்த 30-12-2021 பிற்பகல் முதல் இரவு வரை பெய்த தொடர்மழையால் மீண்டும் சென்னை வெள்ளக்காடாக மாறியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திடீரென பெய்த பேய் மழையில் சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பழம், தி நகர், கோடம்பாக்கம், என சென்னையில் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில்  வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பல இடங்களில் வெள்ளம் வடியாமல் தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகினர். ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு என்பது 45 சென்டிமீட்டர் ஆகும், ஆனால் 71 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிக அளவாக விழுப்புரத்தில் 119 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் 24 சதவீதம் அதிக அளவில் மழை பெய்துள்ளது என குறிப்பிட்டது.

மொத்தத்தில் ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடானதும், அதன் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும், அதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட  பலர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் சாலைகளில் சிக்கிக்கொண்டனர்.  வானகனங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்ததால் கடும் அவதிக்கு ஆளாகினர். பலர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு போக்குவரத்து சீரடையும் என பல மணி நேரம் காத்திருந்தனர். மழைப்பொழிவை ஏன் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கேள்விக்கணைகளை தொடுத்தன. பின்னர் இது குறித்து விளக்கமளித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வானிலை ஆய்வு மையத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம், இம்முறை அவர்களே எதிர்பாராத வகையில் மழை பெய்துள்ளது. மழை நிலவரத்தை துல்லியமாக கணிக்கும் இயந்திரங்களை வாங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனாலும் சென்னையில் இந்த அளவிற்கு மழை பெய்யும் என்பதை ஏன் வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என தொடர் கேள்விகள் எழுந்தது, மிகப் பெரும் மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறி விட்டது ஏன் என சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், செயற்கைக்கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். ஆனால் காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சில நேரங்களில் வேகமாக கடந்து விடும், அப்படி  நகர்ந்ததால் சென்னையில்  கனமழை பெய்யும் என்பதை கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறை பிரச்சினையால் கன மழையை கணிக்க முடியவில்லை, எனவே அதை துல்லியமாக கணிக்க நவீன உபகரணங்கள் தேவைப்படுகின்றன எனக் கூறியிருந்தார். அது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்னதாக இது தொடர்பாக  தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், சென்னையில் சில இடங்களில் லேசான முதல்  இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.  3. 40 மணிக்கு ஐஎம் டி நேவிகேஷன் எச்சரிக்கை வெளியிட்டது. அதில் 1-2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனிடையே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இரவு வரை மழை பெய்ய தொடங்கியது. 4:15 மணிக்கு ஐஎம்டி ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி தீவிரமான கனமழை பெய்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. நகரின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அகசிவப்பு எச்சரிக்கை நிலைமையை முன்கூட்டிய சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தவறிவிட்டது என கூறியிருந்தார்.

அதாவது கன மழையை முன்கூட்டியே வானிலை மையம் எச்சரிக்க தவறியது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளோ மக்களை எச்சரிக்க தவறிய தமிழக அரசு என கடுமையாக விமர்சித்தன. அதே நேரத்தில் கனமழையை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியவில்லை அதற்கு காரணம் போதிய தொழில்நுட்ப  திறன் இல்லாததே என புவியரசன் கூறியிருந்ததும் மறுபுறம் மத்திய அரசு மீது விமர்சனத்தை உருவாக்கியது.  இந்நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பதவியிலிருந்து புவியரசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு புவியரசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். புவியரசன் கன மழையை கனிக்க தவறியது  தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது . 

click me!