தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க அவசரம்.. ‘ஆமாம் சாமி’ குழு அமைப்பு.. செங்கோட்டையனை பிடிபிடித்த திமுக!

By Asianet TamilFirst Published May 15, 2020, 9:53 PM IST
Highlights

 ஓரிரு மாதங்களில் நோய்த் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாகத் திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சார்புடைய பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்தக் குழுவில் பெற்றோர்களையோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, நாடறிந்த நல்ல கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வி துறை அமைச்சர் குழு அமைத்துள்ளதற் திமுக கடும் கண்டம் தெரிவித்துள்ளது. 
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்படும் என்று 10 நாட்களுக்கு முன்பு கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த வாரம் திடீரென்று ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று செங்கோட்டையன் அறிவித்தார். கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஆனால், அதை எதையும் ஆளும் அதிமுக காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
ஹால்டிக்கெட் தயாரிப்பு, மாணவர்களை தேர்வுக் கூடத்துக்கு அழைத்து வர பேருந்து வசதிக்கு கணக்கெடுப்பு என கல்வித் துறை பிஸியாக இருந்துவருகிறது. மேலும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனைக் கூறும் வகையில் குழு ஒன்றையும் செங்கோட்டையன் அமைத்துள்ளார். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளிகள் திறக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதற்கும் கல்வித் துறை முன்னாள் அமைச்சர்  தங்கம் தென்னரசு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், “இந்தியாவே கொரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையாலும், தவறான முடிவுகளாலும் இந்த நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி, இன்று தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா பரவலுக்கு தன் பொறுப்பை எளிதாகத் துறந்து பழியை மக்களின் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ள முதலமைச்சரே முயலும்போது, அவருக்குக் கீழே இருக்கிற அமைச்சர் பெருமக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? 
கொரோனா தாக்கத்தால் அச்ச உணர்வு அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்துள்ள நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஓரிரு மாதங்களில் நோய்த் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாகத் திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சார்புடைய பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இந்தக் குழுவில் பெற்றோர்களையோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, நாடறிந்த நல்ல கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையையும் உள்ள நிலைமைகளையும் உரத்துச் சொல்வதற்கான உரிய வழிகளை அடைத்துவிட்டு, அமைச்சரின் எண்ணத்திற்கு வெறுமனே தலையசைக்கும் அதிகாரிகளை மட்டும் கொண்ட குழுவினை அவசரமாக அமைத்துள்ளது ஏன்?
ஊரடங்கு நான்காம் கட்டமாக நீடிக்கப்படக் கூடும் என்று நம்பத்தகுந்த வகையில் செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது அவசரமாகப் பள்ளிகளைத் திறக்கும் அமைச்சரின் முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்பந்தம் என்ன? அண்மையில் முதல்வரைச் சந்தித்துள்ள மருத்துவர்குழு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஏதேனும் இது குறித்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி இருக்கிறதா?தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 'ஆதர்ஷ புருஷர்களாக' விளங்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் கீழ் இயங்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமே (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஜுலை மாதத்தில் நடத்த உத்தேசித்திருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டுமே அவசரம் அவசரமாகத் தேர்வுகளை ஜுன் முதல் நாளே துவக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் நிபுணர்களுடன் ஆலோசித்து பின்னர் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும் என்று சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், திடீரெனத் தன் முடிவை மாற்றி ஜுன் முதல் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்க வேண்டிய அழுத்தம் எங்கே இருந்து வந்தது? பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படுவதற்கான எந்த அறிவிப்பும் - முன்னேற்பாடுகளும் இல்லாதபோது பல லட்சக்கணக்கான மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு இன்றைய ஊரடங்கு சூழலில் எவ்வாறு அழைத்து வர முடியும்?
கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது உள்ளார்களா? மேற்கண்ட கேள்விகளுக்கு மட்டுமல்ல, எந்தக் கேள்விக்கும் உருப்படியான பதில் பள்ளிக் கல்வித்துறையிடம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! நிலைமையின் தீவிரத்தை உணராது பத்தாம் வகுப்புத் தேர்வை ஜுன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வதும் பள்ளிகளை அவசர அவசரமாக திறக்க முயற்சிப்பதும் தமிழ்நாட்டு மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும். கொரோனா தொற்றிலிருந்து தமிழகம் விடுபட்ட நல்ல சூழல் உருவாகும்போது தேர்வுகளை நடத்துவது குறித்தும் - பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

click me!