இன்னும் சற்று நேரத்தில் திமுக பேரணி !! 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் 5,000 போலீசார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !!

By Selvanayagam PFirst Published Dec 23, 2019, 10:13 AM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னையில் இன்று பேரணி நடத்துகின்றன/ இந்த பேரணிக்கு 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை  தெரிவித்துள்ளது.
 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இதையடுத்து  குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணி இன்னும் சற்று நேரத்தில்  சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

ஆனால் இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணியை திட்டமிட்டபடி நடத்த தி.மு.க. தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பேரணியில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த பேரணி தாளமுத்து நடராசன் மாளிகை முதல் பேரணி செல்லும் லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை, ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை வழிநெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 

பேரணி முடிவில் போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். எதிர்பாராத அசம்பாவிதம், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் பேரணி செல்லும் பாதைகளில் உள்ள கடைகள், நிறுவனங்களை அடைக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தி.மு.க. நடத்தும் பேரணியை கருத்தில் கொண்டு எழும்பூரில் இன்று சில மணி நேரத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்ய போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேரணி நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. 

பேரணி நடக்கும் இடங்களை தாண்டி நகரின் பல பகுதிகளிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதனிடையே  ப.சிதம்பரம், தாயநிதி மாறன், வைகோ, கனிமொழி, திருச்சி சிவா, முத்தரசன் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

click me!