
சட்டமன்றத்தில் இன்று நடந்த பட்ஜெட் மீதான மானிய விவாதத்தின்போது, ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டமன்றத்தில் கூச்சலும், அமளியும் ஏற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடியது. பின்னர், கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விவாதம் நடைபெறவில்லை. இதனால், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையில் விவசாயிகள் கடன் பிரச்சனை, மாட்டு இறைச்சி பிரச்சனை என ஏராளமாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் ஜிஎஸ்டி மசோதா அமல் படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
ஜிஎஸ்டி மசோதாவை எதிர்த்து ஓட்டல்கள், மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகத்தில் ஜிஎஸ்டிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 14ம் தேதி (இன்று) சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர் கே.சி.வீரமணி, ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
திமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டு வருவதால், அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் தனபால் கூறினார். ஆனால், அவர்களின் கூச்சல் ஓயவில்லை. இதையடுத்து திமுகவினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜிஎஸ்டி மசோதாவை பல மாநிலங்களில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. முதல் நாளான இன்றே ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்வதால், வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும் என தெரிகிறது.