முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற ஒரு சில திமுக எம்எல்ஏக்கள் ரகசியமாக வாழ்த்துத் தெரிவித்துள்ள சம்பவம் திமுகவுக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அவரது வெளியாட்டு பயணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என திமுகவினர் கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிபெற சில திமுக எம்.எல்.ஏ.க்களே ரகசியமாக வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் எல்லையோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ. தன் தொகுதியில மலைய உடைச்சு பக்கத்து மாநிலத்துக்குக் கொண்டு போறாங்க, அதப்பத்தி அதிகாரிகளிடம் புகார் அளித்தால்அவர் கண்டு கொள்ள மாட்டேன்கிறார் என புலம்பி இருக்கிறார். அதுல எம்எல்ஏன்ற முறையில் ஒரு வருமானமும் இல்லையே என நினைத்து முதலமைச்சரை நேரடியாக சந்தித்து புகாரை தட்டிவிட்டிருக்கிறார்.
அவரிடம் விவரத்தைக் கேட்டுக் கொண்ட இபிஎஸ், நீங்க ஊருக்குப் போங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அவர் சொன்ன படியே இந்த எம்எல்ஏ தனது தொகுதிக்குப் போனதும் வெயிட்டாக கவனிக்கப்பட்டிருக்கிறார்.
இது போல மேலும் சில திமுக எம்எல்ஏக்களுக்கு நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்கு இந்த திமுக எம்எல்ஏக்கள் ரகசியமாக வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்து திமுக தலைமை நொந்து போயுள்ளதாம்.