காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்பு கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு கூடியது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால் மத்திய அரசு மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்திவந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.