'என் மேல அவ்வளவு பாசமா அண்ணே..' எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த உதயநிதி !!

By Raghupati RFirst Published Feb 18, 2022, 8:36 AM IST
Highlights

‘எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபையை முடக்குவேன் என கூறி வருகிறார். முடிந்தால் அதை செய்து பாருங்கள். உங்களை மாதிரி, கூவத்தூரில் நாற்காலிக்கு அடியில் சசிகலாவின் காலில் விழுந்து முதல்வராக வரவில்லை’ என்று சரமாரியாக விமர்சித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 

சேலம் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட், கோட்டை பகுதியில் நேற்று நடந்தது. இதில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசினார். 

அப்போது, ‘அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்துவிட்டு சென்றார்கள். அதாவது 5¾ லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான கொரோனா நிவாரண தொகை ரூ. 4, 000-ஐ முதல்வர் கொடுத்தார். அதுமட்டுமின்றி அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1, 000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் விரைவில் மாதம் ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. 

ஆனால்,  திமுக ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா 2-ம் அலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரு கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தினார்கள்.

கொரோனா காலத்திலும் அதிமுக அரசு கொள்ளையடித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா 3-வது அலையை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய இழப்பு தடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபையை முடக்குவேன் என கூறி வருகிறார். 

முடிந்தால் அதை செய்து பாருங்கள். உங்களை மாதிரி, கூவத்தூரில் நாற்காலிக்கு அடியில் சசிகலாவின் காலில் விழுந்து முதல்வராக வரவில்லை. சட்டசபை தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது தனி பாசம் உள்ளது. என் மேல அவருக்கு அதிக பாசம் இருக்கும் போல. தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அவர் காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். 

நான் தினமும் மக்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். நீட் தேர்வு ரத்து சிறப்பு தீர்மானத்தின்போது அவருக்கு எதிரே தான் அமர்ந்திருந்தேன். நாற்காலிக்கு அடியில் பார்த்தால் தெரியாது. நாற்காலிக்கு மேலே பார்த்திருந்தால் தெரியும். தி. மு. க. ஆட்சி இன்னும் 27 அமாவாசைகள் நீடிக்கும் என்று கூறுகிறார். தமிழகத்தில் 2 அமாவாசைகள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் கால் வைக்க முடியாது என்று பிரதமர் மோடியின் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசினார். 

பாஜகவின் அடிமையாக அதிமுக உள்ளது. தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லை, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து எனது பணி இருக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். எனவே, அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று பேசினார்.

click me!