
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் மாமல்லபுரத்தில் திமுக கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம், நேற்று நடந்தது. அப்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு, ‘ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நகர்ப்புற தேர்தலிலும், நம் உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும்.
நலத்திட்டங்களை பகிர்ந்தளிக்கவே உள்ளாட்சி. ஆட்சியில் இருந்த அதிமுக ஐந்து ஆண்டுகளாக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், மக்கள் ஜனநாயகத்தை உருவாக்காமல் முடக்கியது. தேர்தலில் நிற்க, அக்கட்சிக்கு யோக்கியதை உள்ளதா ?
தேர்தலில், எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்பார்கள் ? தற்போது அரசிடம் நிதியில்லை. கஜானாவை காலியாக்கிய அதிமுக, பெண்களுக்கு மாத உரிமைத் தொகை எங்கே என்று கேள்வி கேட்கிறது. அந்த கட்சியினருக்கு, மூளையில் ஏதாவது இருக்குதா ? பட்ஜெட்டில் அறிவித்து, நிதி ஒதுக்கிய பின் தான் அளிக்க முடியும். நிதி ஆதாரம் உருவாக்கி அளிப்பதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ள சேத பாதிப்பு நிவாரணமாக, மத்திய அரசிடம் கேட்ட 6, 230 கோடி ரூபாயை இன்னும் கிடைக்கவில்லை. கிராமப்புற கோவில்களுக்கு ஒரு கால பூஜை, ஊதியம் வழங்க 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு அளியுங்கள்’ என்று அதிமுகவை கடுமையாக தாக்கி பேசினார் டி.ஆர்.பாலு.