மனுஷ்யபுத்திரனை தி.மு.க.வில் இருந்து விரட்டுங்கள்! ஸ்டாலினிடம் கொந்தளித்த நிர்வாகிகள்!

By vinoth kumarFirst Published Aug 21, 2018, 11:55 AM IST
Highlights

தொடர்ந்து இந்து மதத்தையும் இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மனுஷ்யபுத்திரனை உடனடியாக தி.மு.கவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்ந்து இந்து மதத்தையும் இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மனுஷ்யபுத்திரனை உடனடியாக தி.மு.கவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மனுஷ்யபுத்திரன் கடந்த 2015ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்தார். மேலும் அவர் தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராகவும் விளங்கி வருகிறார். நினைக்கும் போதெல்லாம் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் அளவிற்கு தி.மு.கவில் முக்கியமான ஒரு நபராக மனுஷ்யபுத்திரன் விளங்கி வந்தார். 

இதற்கு காரணம் சமூக வலைதளங்களில் மனுஷ்யபுத்திரன் மிகவும் ஆக்டிவாக இருந்தது மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.கவிற்கு ஆதரவாக களம் இறங்கி எதிர்கட்சியினரை மிரள வைத்தது போன்றவை தான். ஆனால் கடந்த சில மாதங்களாக மனுஷ்யபுத்திரனை சந்திப்பதை ஸ்டாலின் தவிர்த்து வருகிறார். கலைஞர் மறைவை தொடர்ந்து கூட ஸ்டாலினை சந்தித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை மனுஷ்யபுத்திரன் ஸ்டாலினை சந்திக்கவில்லை. இதற்கு காரணம் ஸ்டாலின் மனுஷ்யபுத்திரனை சந்திக்க விரும்பாதது தான் என்கின்றனர் தி.மு.கவினர். ஏனென்றால் அண்மைக்காலமாக பா.ஜ.கவிற்கு எதிராக எழுதுவதாக கருதிக் கொண்டு இந்த மத நம்பிக்கைகளையும், இந்து கடவுள்களையும் விமர்சிக்கும் தொனியிலும் கேலி செய்யும் தொனியிலும் மனுஷ்யபுத்திரன் பேசுவதாக எழுந்த புகாரே ஆகும்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவாக அறிக்கை வெளியிட்டது தி.மு.கவினரையே கோபம் அடையச் செய்தது. ஏனென்றால் கோடிக்கணக்கான இந்துக்கள் தெய்வமாக கருதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய வார்த்தைகள் அப்படி. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட்டதை அவரது குடும்பத்தினரே கூட விரும்பவில்லை. மேலும் இந்து மதம் மற்றும் கடவுள் விஷயத்தில் கலைஞர் பாணி வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு பலரும் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனை ஏற்று முடிந்த அளவிற்கு ஸ்டாலின் இந்து மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைப்பதில்லை. இந்த நிலையில் தான் கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டதற்கு அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என அம்மாநில அரசு கூறியதே காரணம் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் கூற ஆரம்பித்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதாக கருதிக் கொண்டு மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை தான் இந்துக்களின் மனதை கடுமையாக புண்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாகவே பா.ஜ.கவினரும் இந்துக்களும் மனுஷ்யபுத்திரனை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் மிரட்டல்களும் விடுக்க ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன மனுஷ்யபுத்திரன் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். ஆனால் தற்போது வரை தனது கட்சியின் பேச்சாளரான  மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் எதுவும் பேசவும் இல்லை, அறிக்கையும் வெளியிடவில்லை. அத்துடன் தி.மு.கவின் சில மூத்த நிர்வாகிகள் என்ன தான் மனுஷ்யபுத்திரன் நல்ல பேச்சாளராகவும், சமூக வலைதள செயல்பாட்டாளராக இருந்தாலும் அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்கிற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. எனவே அவரை தி.மு.கவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறார்.

click me!