திமுக பிரமுகர் போட்ட நாடகம் அம்பலம்... போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் அவலம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 8, 2021, 10:40 AM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவரும் ஆவார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவரும் ஆவார்.

இவரது சகோதரர் கண்ணன் பெரியபாளையம் அருகே திருநிலை கிராமத்திற்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி காரில் பயணம் செய்தார். கார், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் ஏரிக்கரை அருகே உள்ள வேகத்தடையில் சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நாலு பேர் கொண்ட அடையாளம் தெரியாத  நபர்கள் திடீரென காரை வழிமறித்து நிறுத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜா என்பவரை பிடித்து விசாரித்த போது, தாக்குதல் சம்பவமே ஒரு நாடகம் என்பது தெரிய வந்தது.

கண்ணனுக்கு அமைச்சர்கள் போல கையில் துப்பாக்கியுடன் காவல் துறையின் பி.எஸ்.ஓ பாதுகாப்புடன் காரில் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்காக வக்கீல் ராஜாவை அணுகியுள்ளார். உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்று ராஜா கொடுத்த  ஆலோசனையின்படி சில ரவுடிகளை செட்டப் செய்து கண்ணன், தனது காரை தாக்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து வக்கீல் ராஜா மற்றும் தாக்குதல் நாடகத்தின் கூட்டாளிகளான மாதவரம் விவேக் என்கிற லியோ விவேக், அயனாவரம் பாலாஜி, ஐசிஎப் யுவராஜ்,கொளத்தூர் ஹரிஹரன்,கொளத்தூர் சக்திவேல் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டு ரவுடிகளை செட்டப் செய்த கருணாகரன் தனது மரியாதையையும்,  சொந்த காரையும் இழந்தது மட்டுமே மிச்சம் என்ற மக்கள் பேசி வருகின்றனர்.

click me!