மு.க. ஸ்டாலின் காணாமல் போவாரா..? சி.வி. சண்முகத்துக்கு விரைவில் ‘சனி’ பிடிக்கப்போகிறது... கோபத்தில் கொப்பளித்த பொன்முடி!

By Asianet TamilFirst Published Oct 4, 2019, 6:45 AM IST
Highlights

அமைச்சர் சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஊழலின் உறைவிடமாக இருக்கும் அமைச்சர் கரெப்சனில் கிடைக்கும் பண திமிரில் வார்த்தைகளை ‘வாய்க்கு வந்தபடி’ கொட்டுவது அரசியல் பண்பாடு அல்ல. ‘அம்மையாருக்கு ஜால்ரா’   பிறகு ‘சின்னம்மாவுக்கு ஜால்ரா’ இப்போது ‘எடப்பாடிக்கு ஜால்ரா’ என்று கையில் ஜால்ராவை வைத்து ஓங்கி அடித்துக் கொண்டிருக்கும் சி.வி. சண்முகத்தின் நாக்கில் ‘சனி’ குடியிருந்தால்- அவருக்கு விரைவில் ‘சனி’ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

‘அம்மையாருக்கு ஜால்ரா’   பிறகு ‘சின்னம்மாவுக்கு ஜால்ரா’ இப்போது ‘எடப்பாடிக்கு ஜால்ரா’ என்று கையில் ஜால்ராவை வைத்து ஓங்கி அடித்துக் கொண்டிருக்கும் சி.வி. சண்முகத்தின் நாக்கில் ‘சனி’ குடியிருந்தால்- அவருக்கு விரைவில் ‘சனி’ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு கூட்டத்தில்,  விஜயகாந்த் நல்ல உடல் நிலையோடு இருந்திருந்தால், ஸ்டாலின் காணாமல் போயிருப்பார் என்று பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளருமான பொன்முடி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவருடைய அறிக்கை:


“விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வழக்கம் போல்  ‘நிதானம்’ தவறி ‘விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்’ என்று அநாகரிகமாகப் பேசியிருப்பதற்கு என கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரை மட்டுமல்ல, எங்கள் கட்சியில் உள்ள ஒரு தொண்டனைக்கூட அடையாளம் தெரியாமல் போக வைக்க எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதை, ‘நிதானம்’ திரும்பிய பிறகாவது அமைச்சர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
‘ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சி தேமுதிக’, ‘எங்களால்தான் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரானார்’, ‘அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2011-ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார்’ என்றெல்லாம் விமர்சித்தவர்கள் வேறு யாருமல்ல, அதிமுக அமைச்சர்கள்தான். 2011 தேர்தலில் கூட்டணிக்கு வர முடியாது என்று மறுத்து கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தை  ‘தூதுவர்களை’ அனுப்பி ‘கெஞ்சிக் கூத்தாடி’ அழைத்து வந்து கூட்டணி வைத்தது அதிமுகதான்.


இவ்வளவும் செய்துவிட்டு வெற்றியும் பெற்று சட்டப்பேரவைக்கு வந்தவுடன் விஜயகாந்தை வசைபாடி- அவர்களின் கட்சி  உறுப்பினர்களை எல்லாம் நீக்கி- விஜயகாந்தை அசிங்கமான சைகைகள் மூலம் கேவலப்படுத்தியவர்கள் அதிமுக அமைச்சர்கள்தான். 2012 சட்டப்பேரவை பதிவேடுகளை எடுத்துப் பார்த்தால் அதிமுக அமைச்சர்களின் ‘அநாகரிக லட்சணம்’ அவைக்குறிப்புகளில் நிரம்பியிருக்கும்.
முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, “தகுதியில்லாதவர்களுக்கு பதவி திடீரென்று வந்துவிட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த். தேமுதிக கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்” என்று சட்டப்பேரவையிலேயே பேசி விஜயகாந்தை கொச்சைப்படுத்தியதை அமைச்சர் சி.வி. சண்முகம் மறந்து விட்டாரா?
“அதிக ஊழல் செய்த அதிமுக ஆட்சி நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்”, “அதிமுகவில் உள்ள 37 எம்.பி.க்களும் வேஸ்ட்” என்று பிரேமலதா விஜயகாந்த் உங்களை அசிங்கப்படுத்தி பேட்டி கொடுத்த பிறகும் கோயம்பேட்டிற்கும், நட்சத்திர ஹோட்டலுக்கும் படையெடுத்து கூட்டணி வைத்தது அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு தற்போது நினைவில் வரவில்லை என்றால், ‘நிதானம் கெட்டு’ தடுமாற்றத்தில் விக்ரவாண்டியில் உளறிக் கொட்டியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்?


அமைச்சர் சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஊழலின் உறைவிடமாக இருக்கும் அமைச்சர் கரெப்சனில் கிடைக்கும் பண திமிரில் வார்த்தைகளை ‘வாய்க்கு வந்தபடி’ கொட்டுவது அரசியல் பண்பாடு அல்ல. ‘அம்மையாருக்கு ஜால்ரா’   பிறகு ‘சின்னம்மாவுக்கு ஜால்ரா’ இப்போது ‘எடப்பாடிக்கு ஜால்ரா’ என்று கையில் ஜால்ராவை வைத்து ஓங்கி அடித்துக் கொண்டிருக்கும் சி.வி. சண்முகத்தின் நாக்கில் ‘சனி’ குடியிருந்தால்- அவருக்கு விரைவில் ‘சனி’ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


“சிலை கடத்தல் வழக்கு விசாரணை நடக்கும் உயர்நீதிமன்ற அமர்வை மாற்ற ஒரு அமைச்சர் முயற்சி செய்தார்” என்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்த பிறகு- அதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் தெரிந்தபிறகு, அமைச்சர் சி.வி. சண்முகம் போன்றவர்களுக்கு இப்படி இனம் புரியாத பயத்தில் குளிர் ஜூரம் வருவது இயற்கைதான். அதற்காக எங்கள் கட்சித் தலைவர் மீது பாய்ந்து பிராண்ட நினைத்தால்- விக்ரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அடுத்து வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகும் ‘அமைச்சர் பதவி’ என்ற அகங்காரம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதை சி.வி. சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே செயல்வீரர்கள் கூட்டத்தில் “இந்த தேர்தல்தான் நமக்குக் கடைசி தேர்தல்” என்ற உண்மையை அமைச்சர் சி.வி. சண்முகம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு நன்றி. கடந்த இரு வருடங்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சில நாட்கள் மிரட்டி- பல நாட்கள் பாராட்டியும் அடிக்கும் கொள்ளைகளுக்கு  ‘தேதி குறிக்கப்பட்டு விட்டதே’ என்ற எரிச்சலில் எங்கள் கட்சித் தலைவரைப் பார்த்து பேசும் ‘அனாமதேயே பேர்வழிகளை’ திமுக தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை  சி.வி. சண்முகம் உணர வேண்டும்.
விக்ரவாண்டி இடைத் தேர்தலை நிதனாமாக எதிர்கொண்டு- ஜனநாயக முறையில் தேர்தல் பணிகளிலும், நாகரிகமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் சி.வி சண்முகத்தை கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் இது போன்ற எங்கள் கட்சித் தலைவரை வம்புக்கு இழுத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு அறிக்கையில் பொன்முடி தெரிவித்துள்ளார்.

click me!