திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 65 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதில் திமுக வெற்றி பெறுவதற்குத் தேவையான களப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கியதாகவும், களப்பணிகளை முறையாக மேற்கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், 2ஜி முறைகேடு வழக்கு பொய்யானது என நிரூபித்து விடுதலையான ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், முத்தலாக் தடை சட்டமசோதா தொடர்பான முஸ்லீம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், பெரியார் பிறந்த ஈரோட்டில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் திமுக மண்டல மாநாடு நடத்துவது, ஆளுநரின் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.