ஓபிசி இட ஓதுக்கீட்டில் தமிழகத்திற்கு திமுக காங்கிரஸ் துரோகம்..!! சமூக நீதி களத்தில் பாஜக..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2020, 12:04 PM IST
Highlights

அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த 34 வருடங்களாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள் பாஜக அரசு அதை நிறைவேற்ற தயார் என்று நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், 

ஓபிசி இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு திமுக மற்றும் காங்கிரஸ் துரோகம் செய்வதாக தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மருத்துவம் மற்றும் மருத்துவம் மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓபிசி ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக அரசில் தான் இந்த ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற மாயையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முனைவது சமூகநீதி விவகாரத்தில் அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு  துவங்கிய 2007 ஆம் ஆண்டு முதற்கொண்டு இதே நிலைதான் தொடர்கிறது என்பதை மறைப்பது முறையற்ற செயல். உண்மை நிலையினை மக்களிடம் எடுத்துக் கூறாது, அரசியல் உள்நோக்கத்தோடு விடப்படும் அறிக்கைகளை உறுதியாக மறுக்கிறது பாஜக. 

4-1-2007 என்று திமுக, பாமக அங்கம் வகித்த காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வந்தபோது அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிட்டு, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பித்தது ஏன். மேலும் 2014 வரை எந்த வழக்கும் தடையும் இல்லாத நிலையில் 6 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டு இட ஒதுக்கீடு குறித்து வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்?  இது குறித்து கவலையே கொள்ளாத திமுக 2015ல் இதுகுறித்து  தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளாது, இந்த வருட மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வுக் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தற்போது தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் காரணத்தினால் தான் என்பது கண்கூடு. 

பாஜக அரசைப் பொருத்தவரை 2015ல் தொடுக்கப்பட்ட செல்வகுமாரி வழக்கில், ஜனவரி 2016 லேயே மத்திய பாஜக அரசு தன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டது. இந்த ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த நிலையில், அதை மாற்றும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உள்ளதால் மேற்கண்ட வழக்கில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு தர தயாராக உள்ளது மத்திய அரசு, இதற்கான உத்தரவை வழங்குங்கள் என்றும், அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது உயர்நீதிமன்றத்தில் பாஜக மத்திய அரசு, இதே நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு இந்த வழக்கில் திமுகவின் வழக்கறிஞர் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு, WES-10 சதவீத இட ஒதுக்கீட்டை, பாஜக அரசு கொடுத்துள்ளதாக தவறாக தகவலை பதிவு செய்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என அறிந்த மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற உண்மைக்கு மாறான தகவலை அரசியல் உள்நோக்கத்தோடு குறிப்பிட்டுள்ளது முறையற்றது. 

1986 முதல் அமலில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த 34 வருடங்களாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள் பாஜக அரசு அதை நிறைவேற்ற தயார் என்று நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதும் பாஜகவை குறை சொல்வதும், காரணம் ஆக்குவதும், அந்தக் கட்சிகளின் அரசியல் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. சமூக நீதிக்கும் சட்டத்திற்கும் பாஜக என்றும் தலை வணங்கும், என்பதோடு அரசியல் கலப்பில்லாத உள்நோக்கம் இல்லாத சமூகநீதிக்கு பாஜக என்றும் துணை நிற்கும் என்பதை உறுதியாக  கூறுகிறேன்.

 

click me!