
திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்க்காணல் முடிந்தது . மூன்று தொகுதிகளுக்குமான வேட்பாளராக 23 பேர் விருப்ப மனு அளித்தனர். இவர்களுக்கான நேர்க்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன் , ஆர்.எஸ் பாரதி முன்னிலையில் நடந்த நேர்க்காணலில் எடுக்கப்பட்ட விபரங்களை மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்து ஆலோசனை பெற்று வருகின்றனர்.
வேட்பாளர் நேர்க்காணலில் ஆளுங்கட்சி அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பணம் செலவழிக்க கூடியவரா? , தொகுதியில் செல்வாக்கு போன்ற அம்சங்கள் அலசப்பட்டன.
இதில் அரவக்குறிச்சியில் மற்ற வேட்பாளர்களை விட கே.சி.பழனிச்சாமியே வெல்லக்கூடிய வேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, இதே போல் தஞ்சையில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர் அஞ்சுகம் பூபதி மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.
ஆனால் திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மகன் மாறனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த முறை மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. தொகுதியில் செல்வாக்கும் பணபலம், தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவர் எனபதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
மதியத்துக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.