பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு.. ஸ்டாலின் தலைமையில் அணிதிரளும் கூட்டணி கட்சிகள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2021, 10:39 AM IST
Highlights

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, 
 

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 20 ஆம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக தலைவர் மு. க ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தின், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், தி.வேல்முருகன் ஆகியோரின் சார்பில் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20-8-2021 அன்று நடைபெற்ற இந்திய அளவிலான கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஒன்றிய பாஜக அரசின் செயல்களை கண்டித்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-9 -2021 அன்று காலை 10 மணி அளவில் தங்களின் இல்ல முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், ஒருங்கிணைந்து போராடுவோம் மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!