மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கடலூரில் ஆய்வு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து நாளை கடலூரில் திமுக சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் ஓராண்டாக இருந்ததை அடுத்து, தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. மேலும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால், இதுவரை இருந்த ஆளுநர்களைப்போல அல்லாமல், கள ஆய்வு நடத்தினார். கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தியதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆளுநரின் ஆய்விற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அரசு சார்பில் எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. கோவையுடன் ஆய்வு முடிவடையவில்லை. மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையும் வெளியிட்டது.
அதேபோலவே, திருப்பூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்திய ஆளுநர் பன்வாரிலால், நாளை கடலூரில் ஆய்வு செய்ய இருக்கிறார்.
ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் அறவழிப்போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் நாளை ஆளுநர் கடலூரில் ஆய்வு செய்ய இருப்பதால், ஆளுநரின் ஆய்வைக் கண்டித்து நாளை கடலூரில் திமுக சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆளுநரின் அதிகார வேட்கையை கண்டித்து திமுக சார்பில் நாளை கடலூரில் நடைபெறும் அறவழிப்போராட்டத்தில் திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.