பல்லடம், திருவெறும்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டதாக திமுக, அதிமுக போஸ்டர்... அடங்காத ஆர்வக்கோளாறுகள்.!

By Asianet TamilFirst Published May 1, 2021, 9:46 PM IST
Highlights

வாக்கு எண்ணிக்கையே இன்னும் நடக்காத நிலையில் பல்லடம், திருவெறும்பூர் தொகுதிகளில் அதிமுக, திமுகவினர் நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

தமிழகத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னணி நிலவரமே 10 மணிக்கு மேல்தான் தெரிவரும். வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில், பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வெற்றி பெற்றுவிட்டதாக திருப்பூர் வடக்கு தொகுதியில் போஸ்டர் அடித்து அதிமுகவினர் சிலர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரை பார்ப்போர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் பார்த்து செல்கின்றனர்.
எம்.எஸ்.எம். ஆனந்தனின் வீடு திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ளதால், இந்த போஸ்டரை அந்தத் தொகுதியில் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் 'வெற்றி வெற்றி வெற்றி' என்றும், 'எல்லாப் புகழும் வாக்காளப் பெருமக்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திமுக சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக சார்பில் பி.குமார் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இருவருக்கும் இடையே இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்களித்து வெற்றி பெற வைத்து வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதேபோல் திமுகவினரும் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்றாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் திமுக, அதிமுகவினர் முன்கூட்டியே போஸ்டர் ஒட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!