21 வன்னியர்களைக் கொன்ற அதிமுகவுக்கு வக்காலத்தா...? கூட்டணி கட்சித் தலைவரை வைத்து டாக்டர் ராமதாஸை வெச்சு செஞ்ச திமுக!

By Asianet TamilFirst Published Oct 10, 2019, 10:04 PM IST
Highlights

சொல்லுக்கு மாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கெல்லாம் திமுக தலைவர் கலைஞர் தேவைப்பட்டார்.
 

2021-ல் திமுக வெற்றி பெறுவதையும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதையும் டாக்டர் ராமதாஸ் அல்ல எவராலும் தடுத்திட முடியாது என்று திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக  தமிழக விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
 “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுக ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு செய்த பல்வேறு பணிகளைக் பட்டியலிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் வன்னியர்களுக்குச் செய்வோம் என உறுதியளித்துள்ளார். அதில் எந்த இடத்திலும் பாமகவையோ, டாக்டர் ராமதாஸையோ குறிப்பிடவோ விமர்சிக்கவோ இல்லை. மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வரவேற்று பாராட்டி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் நாகரீகம்.
ஆனால், வரவேற்க மனம் இல்லாவிட்டாலும் விமர்சித்திருக்க வேண்டியதில்லை. பாமக என்பது வன்னியர்களுக்கான கட்சி இல்லை என்று அறிவித்துவிட்டு, கட்சி பொறுப்புகளில் வன்னியர்களை ஒதுக்கி வைத்துவரும் டாக்டர் ராமதாஸ் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா என டாக்டர் ராமதாஸ் கேட்கிறார். இதுவரை வன்னியர்களுக்கு நடந்த நன்மைகள் எல்லாமே திமுக ஆட்சியில்தான் என்பதை வன்னியர்கள் அறிவார்கள். எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதாவரை வன்னியர்களுக்கு நடந்த ஒரே ஒரு நன்மையைக் கூற முடியுமா? உண்மையில் வன்னியர்களைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது டாக்டர் ராமதாஸ்தான்.
மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு பெற்றே தீருவேன் எனக் கூறி, வன்னியர்களை நம்ப வைத்து, சங்கம் அமைத்தீர்கள். எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன், நானோ எனது குடும்பமோ அரசியலில் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டோம்; அப்படி நடந்தால் முச்சந்தியில் சாட்டையால் அடியுங்கள் என்று கூறி வன்னியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டினீர்கள். ஆனால், சொல்லுக்கு மாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கெல்லாம் திமுக தலைவர் கலைஞர் தேவைப்பட்டார்.
தொடர்ந்து மத்தியில் அமைச்சராக இருந்தீர்கள். அப்போது மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கிடைத்திட  தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? யார் வன்னியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது? 1980-லிருந்து 88வரை தனி ஒதுக்கீடு கோரி வன்னிய சங்கம் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு, போராடிய 21 வன்னியர்களைக் குருவிகளைச் சுடுவதைப் போன்ற சுட்டுக் கொன்றது. சுமார் 42 ஆயிரம் வன்னியர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்கு அலைய வைத்தது. அதிமுக ஆட்சி முடியும் வரை இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


அப்படிப்பட்ட அரசின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறி அதிமுகவிற்கு வக்காலத்து வாங்குகிறார். ஆனால் அதிமுக அரசு மாறி, திமுக ஆட்சி அமைந்தவுடன் 1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்துப் பேசி வன்னியர் உள்ளிட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கொடுத்த கலைஞரை விமர்சனம் செய்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகத்திலும் வன்னியர்கள் ஓரம் கட்டப்பட்டு பிற சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக எந்தத் தேதியில்? எந்த வகையில்? வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டுமென கோரியது? வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி பாமக நடத்திய போராட்டங்கள் என்ன? டாக்டர் ராமதாஸ் விளக்குவாரா? கூட்டங்களுக்கு மஞ்சள் சட்டை அணிந்தே வரக்கூடாது என்று கூறியவர்கள் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரி போராடியதாகக் கூறுவது வன்னியர்களை ஏமாற்றும் மோசடி அறிவிப்பாகும்.
1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர் என்று திமுக தலைவர் கூறியதற்கு, 1996க்கு முன் வன்னியர் எவரையும் திமுக அரசு இப்பொறுப்புகளில் நியமிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் கூறுவது வேடிக்கையானது. 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கியதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்களை ஏன் அதற்கு முன் வன்னியர் சங்கத்தைத் தொடங்கவில்லை என்று கேட்பது அர்த்தமற்றதாகும்.
திண்டிவனம் வெங்கட்ராமன் என்ற வன்னியரை முதன்முதலில் திமுகதான் மத்திய அமைச்சராக்கியது என்று தி.மு.க தலைவர் கூறியதற்கு அவருக்குப் பிறகு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையாவது அமைச்சராக்கியது உண்டா? என்று கேட்கிறார். வன்னியர்களின் உழைப்பில் கட்சி நடத்தும் தாங்கள் பாமக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து பெற்ற 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் வன்னியர்களையா வேட்பாளர்களாக நிறுத்தினீர்கள்? 4 இடங்களை பிற சாதியினருக்கு விற்கவில்லையா? திமுகவை நோக்கிக் கேள்வி கேட்க என்ன தார்மீகம் உள்ளது?
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடியாது என 30.07.2010ல் வெளிப்படையாக கலைஞர் அறிவித்தார் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 28.10.2010ல் வைத்த கோரிக்கையை கலைஞர் ஏற்கவில்லை என்றும் குறை கூறும் டாக்டர் ராமதாஸ், அடுத்த நான்கே மாதத்தில் அதே திமுகவோடு கூட்டணி வைத்தது எந்த அடிப்படையில்? கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று கூறலாம். தனி ஒதுக்கீடு என்பது வேறு, உள் ஒதுக்கீடு என்பது வேறு. அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். திமுக தலைவர் கனவு காண வேண்டிய அவசியமில்லை. கட்சி வலுவாக இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. கடும் உழைப்பு அவரிடம் இருக்கிறது. 2021-ல் திமுக வெற்றி பெறுவதையும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதையும் டாக்டர் ராமதாஸ் அல்ல எவராலும் தடுத்திட முடியாது.” என காட்டமாக விமர்சித்துள்ளார் பொன் குமார்.

click me!